எனக்கு ஒரு வயது ஆகும் வரை தகப்பனாருடன் இருந்தேன். அதன் பிறகு 2 வயதிலிருந்து தாய்வழித் தாத்தாவிடம் வளர்ந்தேன். தற்போது எனக்கு 18 வயது ஆகிறது. என் தந்தையிடம் கொடுத்த உடைமைகள் எனக்குக் கிடைக்க வேண்டும். என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
வாசகர், திருவாரூர்.
உங்களுக்கு துலாம் லக்னம் (விருச்சிக லக்னம் அல்ல), மேஷ ராசி, அசுவினி நட்சத்திரம். லக்னாதிபதி, அஷ்டமாதிபதி சுக்கிர பகவான் ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார்.
சுக பூர்வ புண்ணியாதிபதி சனி பகவான் எட்டாம் வீட்டில் ராகு பகவானுடன் இணைந்திருக்கிறார். ஒன்பதாம் வீட்டிற்கும், பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து சிறப்பான தர்மகர்மாதிபதி யோகத்தைக் கொடுக்கிறார்.
மூன்று, ஆறாம் வீட்டுக்கு அதிபதியான குரு பகவான் பத்தாம் வீட்டில் உச்சம் பெற்று, ஐந்தாம் பார்வையாக இரண்டாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் கேது பகவானையும், ஏழாம் பார்வையாக நான்காம் வீட்டையும், ஒன்பதாம் பார்வையாக ஆறாம் வீடான தன் ஆட்சி வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் லாபாதிபதியான சூரிய பகவானையும் பார்வை செய்கிறார்.
இரண்டு, ஏழாம் வீடுகளுக்கு அதிபதியான செவ்வாய் பகவான் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியில் ஆட்சி பெறுகிறார்.
தற்சமயம் சுக்கிர பகவானின் தசையில் இறுதிப்பகுதி நடப்பதால் பட்டப்படிப்பு முடிந்தவுடன் கணினி சம்பந்தப்பட்ட துறைகளில் விற்பனைப் பிரிவுகளில் வேலை கிடைக்கும். இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் நல்ல நிலையை எட்டி விடுவீர்கள். இந்த காலகட்டத்திற்குள் தந்தையிடமிருந்து வரவேண்டிய உடமைகள் அனைத்தும் வந்து சேர்ந்துவிடும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் மஹாலட்சுமியை வழிபட்டு வரவும்.