என் குடும்பம் என்னை நம்பி உள்ளது. எனக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. அரசு வேலை அல்லது வெளிநாட்டு வேலை கிடைக்குமா?
வாசகர், காரைக்கால்-5.
உங்களுக்கு மகர லக்னம், மகர ராசி, உத்திராடம் நட்சத்திரம். லக்னம் மற்றும் இரண்டாம் வீட்டுக்கதிபதியான சனிபகவான் லக்னத்தில் ஆட்சி பெற்று அமர்ந்து பஞ்ச மஹா புருஷ யோகத்தைப் பெறுகிறார். பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் எட்டாம் வீட்டில் குரு பகவானுடன் இணைந்து வர்கோத்தமத்தில் இருக்கிறார். ஆறாம் வீட்டிற்கும், ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் பத்தாம் வீட்டில் சுக லாபாதிபதியான செவ்வாய் பகவானுடன் இணைந்திருக்கிறார். சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்தில் வர்கோத்தமத்தில் அமர்ந்து இருக்கிறார்.
கேது பகவான் ஆறாம் வீட்டிலும், ராகு பகவான் பன்னிரண்டாம் வீட்டில் குரு பகவானின் ஐந்தாம் பார்வையைப் பெற்று அமர்ந்திருக்கிறார். குரு பகவானின் ஏழாம் பார்வை குடும்ப ஸ்தானத்தின் மீதும், ஒன்பதாம் பார்வை சுக ஸ்தானத்தின் மீதும் படிகிறது. தற்சமயம் ராகு பகவானின் தசையில் புத பகவானின் புக்தி நடப்பதால் இந்த ஆண்டே மெக்கானிக்கல், கட்டுமானம், ஆட்டோமொபைல் துறைகளில் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். தனியார் துறையிலேயே வேலை அமையும். வெளிநாடு செல்லும் பாக்கியமும் உள்ளது. பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.