எனக்கு 21 வயதில் முதல் திருமணமாகி ஐந்து வருடங்களில் என் கணவர் இறந்து விட்டார். அப்பொழுது நான்கு வயதில் மகன் இருந்தான். பின்னர் பத்தாண்டுகள் கழித்து மறுமணம் நடந்தது. தற்சமயம் மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. நானும், கணவரும் பணியில் இருக்கிறோம். எங்களுக்கு சொந்த வீடு எப்பொழுது அமையும்? எங்கள் குடும்ப எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?
- வாசகி, கோவை.
உங்களுக்கு மகர லக்னம், கன்னி ராசி, சித்திரை நட்சத்திரம். லக்னம், குடும்ப ஸ்தானத்திற்கும் அதிபதியான சனி பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சூரிய பகவானின் சாரத்தில் (உத்திரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்தில் மூலத் திரிகோணம் பெற்று பஞ்ச மஹா புருஷ யோகங்களில் ஒன்றான மாளவிகா யோகத்தைப் பெற்று நவாம்சத்தில் உச்சம் அடைகிறார்.
ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் தொழில் ஸ்தானத்தில் குரு பகவானின் சாரத்தில் (விசாக நட்சத்திரம்) அமர்ந்து தர்ம கர்மாதிபதி யோகத்தைப் பெறுகிறார். அஷ்டமாதிபதியான சூரிய பகவான் தொழில் ஸ்தானத்தில் நீச்சம்பெற்று வர்கோத்தமத்தில் இருக்கிறார். இதனால் சூரிய பகவானுக்கு நீச்சபங்க ராஜயோகம் உண்டாகிறது. அதோடு புத ஆதித்ய யோகமும் உண்டாகிறது.
சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் புத பகவானின் சாரத்தில் (ஆயில்ய நட்சத்திரம்) நீச்சம் பெற்றமர்ந்து நவாம்சத்தில் உச்சமடைவதால் முழுமையான நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கதிபதி பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் பகவானின் சாரத்தில் (சித்திரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார்.
தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் எட்டாம் வீட்டில் கேது பகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெற்று ஐந்தாம் பார்வையாக தன் மூலத்திரிகோண ராசியான தனுசு ராசியையும், ஏழாம் பார்வையாக குடும்ப ஸ்தானத்திலுள்ள கேது பகவானையும், ஒன்பதாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். குரு, சனி பகவான்களுடன் ராகு பகவானும் இணைந்திருக்கிறார்.
தற்சமயம் சனி பகவானின் தசையில் சூரிய புக்தி நடக்கத் தொடங்கியுள்ளதால் இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த வீடு கட்டும் யோகமுண்டாகும். தொடர்ந்து யோக தசைகள் நடப்பதால் எதிர்காலம் வளமாக அமையும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.