மத அரசியல்-47: சீக்கிய மதம்

மத அரசியல்-47: சீக்கிய மதம்

சீக்கியம் (Sikhism)

சீக்கியம் என்பது சீக் (மாணவர்) என்னும் பஞ்சாபி சொல்லின் தமிழாக்கமாகும். சீக் எனும் சொல் சிஷ்யா எனும் சொல்லிலிருந்து பிறந்தது. அதன் அர்த்தம் பின்பற்றுபவர் அல்லது சீடர் என்பதாகும். இதற்கு குர்மத், குர்முக், மார்க், நிர்மல், பந்தத், ஸ்ச்கா மார்க், கல்ஸ் என்னும் பெயர்களும் உண்டு. சீக்கியம் என்பது செமிடிக் அல்லாத  ஒரு மதம் ஆகும். உலக வழக்கில் மதங்களை பின்பற்றுவதில் ஆறாம் இடத்தை பெரும் ஒரு மதமாகும். இம்மதம் 15 ஆம் நூற்றாண்டின் முடிவில் குறு நானக் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. இது பாகிஸ்தான் மற்றும் வடமேற்கிந்திய பகுதியில் பஞ்சாப் (ஐந்து நதிகளின் நாடு) என்றழைக்கப்படும்  இடத்தில் ஆரம்பமானது. குரு நானக் சத்ரிய (போராளி பிரிவு) எனும் சாதிப்பிரிவில்  பிறந்தவர். ஆனால் மிகவும் அதிகமாக இஸ்லாத்தினாலும் முஸ்லிம்களினாலும்  செல்வாக்குடையவராய் விளங்கினார்.

உலகிலுள்ள 150 இலட்ச சீக்கியர்கள் 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்த நானக் என்ற பெயர் கொண்ட இந்திய குருவை பின்பற்றுகிறார்கள். அவரை பின்பற்றுகிறவர்கள் சீக்கியர் என்றழைக்கப்படுகின்றனர்.  உலக மக்கள் தொகையில் இது 0.39 சதவீதம்.

சீக்கிய மதத்தின் குறிப்புகள்

சீக்கியம் பத்து ஆசான்களின் மதமாகும். அதில் முதலாமவர் குரு நானக் என்பவரும் பத்தாவது மற்றும் கடைசி குரு கோபிந்த் சின்க் என்பவரும் ஆவர். சீக்கிய மதத்தின் வேத நூலாக கருதப்படுவது ஸ்ரீ குரு கரந்த் ஆகும். இது ஆதி கரந்த் சாகிப் என்றும் அறியப்படுகிறது.

முன்னாள் மனித குருக்கள் பெற்றுக்கொண்ட அதே கனமும் மரியாதையும், குரு கிரான்த் சாகிப் புத்தகத்துக்கு கொடுக்கப்படுகிறது. புத்தகம் சீக்கியர்களின் வீட்டில் ஒரு விசேஷமான அறையில் காட்சிக்கு வைக்கப்பட்டு வாசிக்கப்படுகிறது. சீக்கியர்களின் ஆலயங்களினுள் விக்கிரகங்களோ அல்லது சம்பிரதாயப்படி ஆராதனைகளோ அல்லது ஒரு பலிபீடமோ அல்லது ஒரு பிரசங்கமேடையோ கிடையாது. குரு கிரான்த் சாகிப், உயர்த்தப்பட்ட ஒரு மேடையில் திண்டுகளின் மீது வைக்கப்பட்டு ஒரு கூடாரத்தினால் மூடி வைக்கப்படுகிறது. அதன் வசனங்கள் வாசிக்கப்பட்டு கேட்பவர்களுக்காக பாடி காண்பிக்கப்படுகிறது.

இம்மதம் தோன்றிய காலத்தில் இந்தியாவில்  இஸ்லாம், புத்த மதம், சமணம் ஆகிய சமயங்கள் மட்டுமே இருந்தன. இந்த மதத்தவர்கள் தங்களுக்குள் ஒற்றுமையின்றி சதா சண்டையிட்டுக் கொண்டே வாழ்ந்து வந்தனர். சாதிப் பூசல்கள் வேறு. இதனிடையே இஸ்லாமியப் பேரரசுகள் அமைந்து இந்து மன்னர்கள் சிற்றரசர்களானபோது கண்டை சச்சரவுகள் இன்னும் அதிகமாகின. பசி, பட்டினி என்று கஷ்டநிலை மான, மரியாதை காற்றில் பறக்கத் தொடங்கியது.
 

குருநானக் தேவ்ஜி 

நாட்டில் கோழைத்தனம், கொடுமை, மானமின்மை, மரியாதையின்மை, நம்பிக்கை, இன்மை, நாணயம், இன்மை, அறியாமை, அச்சம், அயோக்கியத்தனம் ஆகிய பண்புகள் மதம் எனும் போர்வைக்குள் பதுங்கிக் கொண்டு, மக்களுக்கு தீமைகள் செய்தன, அர உணர்வுகள் மங்கி, மலிந்து, மத உணர்வுகள் அட்டகாசம் செய்தன.

இதனால் மக்கள் போலி மத வாழ்க்கை வாழ்ந்தார்கள் தீமைகளை எதிர்க்கக்கூடிய துணிவு அவர்களிடம் இல்லை அதனால் போலி வாக்குவாதங்களில் ஈடுபட்டு ,ஒருவருடன் ஒருவர் பிணங்கி வாழ்ந்தார்கள் பொதுநல உணர்வும் ,ஒழுக்கமும் மங்கி மறைந்து சுயநல உணர்வு மலிந்து போயிற்று.

போலி வாழ்வை விரும்பாத சிலர் பொதுமக்களை விட்டு விலகி, காட்டுக்கு போய் தவ வாழ்வை மேற்கொண்டார்கள் பெரும்பாலான மக்களிடையே பொறுப்பின்மையும், அச்சமும் காணப்பட்டன அப்போதைய நாட்டின் நிலைமை குறித்து குரு கிரந்த சாகிப்  பின்வருமாறு கூறுகிறது.

• குடிமக்கள் அறியாமையில் மூழ்கிக் கிடக்கிறார்கள் நெருப்புக்கு நடுவே கிடக்கும் பிணங்கள் போலச் செயலற்று வாழ்கிறார்கள். 
• அறிவுள்ளவர்கள் வேடம் அணிந்து கொண்டு இசைக் கருவிகளை மீட்டி, அதற்கு ஏற்ப ஆடிப்பாடிக் குதிக்கிறார்கள்.
• உரக்க உரையாடுகிறார்கள் தாங்கள் போற்றும் வீரர்கள் பற்றி எண்ணங்களைப் பாடல்கள் மூலம்   வெளியிடுகிறார்கள்.        
• அறவோர்கள் அறத்தை கடைப்பிடிக்கிறார்கள் ஆயினும் அவற்றுக்கு உரிய பலன் கிடைக்கவில்லை முக்திக்கு வழி எது என்று கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.        
• தங்களை துறவிகள் என்று கூறிகொள்ளும் இவர்கள் வழி தெரியாது திகைத்து வீடு வாசல்களைத் துறந்து போய் விடுகிறார்கள். 
• ஒவ்வொருவனும் தன்னை பூரணமானவன் என்று கூறிக்கொள்ள ஆசைப்படுகிறான் குறைபாடுடையான் என்று கூறிக்  கொள்ள விரும்பவில்லை.
• தராசில் எடை போட்டுப் பார்த்தால் மனிதனுடைய மதிப்பு எவ்வளவு என்பது தெரிந்து போகும் என நானக் கூறுகிறார்.       
 

இதுபோன்ற ஒரு காலக்கட்டத்தில் குருநானக் தேவ் என்பவர் பஞ்சாப் மாநிலம் ராங் போய் டிடல்வாண்டி என்னும் கிராமத்தில் ஓர் இந்துக் குடும்பத்தில் கி.பி.1469-ஆம் ஆண்டு பிறந்தார் பாகிஸ்தான் லாகூர் அருகே உள்ள இச்சிற்றூர் தற்போது நன்கானா காகிப் என்று அழைக்கப்படுகிறது. பத்து சீக்கிய குருக்களில்முதன்மையானவரான இவர்தான் சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாடும் மக்களும் இப்படி போலியாக வாழ்வது உண்மையில் மதம் ஆகாது என்று குருநானக் கருதினார் ஆகவே மக்களிடையே காணப்படும் போலித்தன்மையை அகற்றி, அச்சத்தையும் அறியாமையும் போக்கி, மக்கள் புது முறையில் வாழ வழிகள் வகுத்தார். 

சீக்கியர்களின் நடத்தை வழிகாட்டுதல்கள் மற்றும் நம்பிக்கைகள் அடங்கிய நூல் ‘ரேஹத் மர்யாதா’ இதில் கூறப்பட்டுள்ள  முதல் சட்டப்படி, ஒரே முடிவற்ற இறைவனையும், குருநானக் தேவ் முதல் ஸ்ரீ குரு கோவிந்த சிங் வரையிலான அவர்களது பத்து குருக்களின் சொற்களையும் போதனைகளையும், எந்த மதத்துடனும் இணைய விரும்பாத பத்தாவது குரு விட்டுச் சென்ற ஞானத்தையும் முழுமனதாக நம்பும் ஒரு மனிதனே உண்மையான சீக்கியர் ஆவார். 

குரு கோவிந்த் சிங்

பாட்னாவில் 1666 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது இயற்பெயர், கோவிந்த் ராய். 1670-ல் குடும்பம் பஞ்சாப் சென்றது. பின்னர் 1672-ல் இமயமலை அடிவாரத்தில் உள்ள சக் நனாகி என்ற இடத்தில் குடும்பம் குடியேறியது. இங்குதான் இவர் ஆரம்பக் கல்வி பயின்றார். எழுதப் படிக்கவும், தற்காப்புக் கலைகள், குதிரையேற்றம், வாள் சண்டை, வில் வித்தை என அனைத்தையும் கற்றார். முகலாய மன்னனால், இவரது தந்தையும் 9-வது சீக்கிய குருவுமான குருதேக் பகதூர் கொலையுண்ட காலத்தில், தன் 9 வயதில் சீக்கிய மதத்தின் 10-வது குருவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பல்வேறு காலகட்டங்களில் முகலாயர்களுடன் பாங்கனி யுத்தம், நாதவுன் யுத்தம் உள்ளிட்ட மொத்தம் பதினான்கு முறை போர்களைத் தலைமையேற்று நடத்தினார். போர்களில் தாய், மகன்களை இழந்தார். 1684-ல் ‘சாண்டி-தி-வார்’ என்ற நூலை பஞ்சாப் மொழியில் எழுதினார். ‘ஜப் சாஹிப்’, ‘அம்ருத் சவையா’, ‘பெண்டி சவுபாய்’ உள்ளிட்ட பல பிரார்த்தனைக் கீதங்களையும் எழுதியுள்ளார். தனது கவிதைகள் மூலமாக நேசம், சமத்துவம் தார்மீக நடத்தை விதிமுறைகள், சமய நெறிமுறைகளைப் பின்பற்றுதல் ஆகியவற்றைப் போதித்தார்.

‘பாண்டா சாஹிப்’ என்ற மத வழிபாட்டு மையத்தை நிறுவினார். இங்கு மத போதனை, ஆயுதப் பயிற்சி, இந்தி, பாரசீகம், பஞ்சாபி மொழி ஆகியவை கற்பிக்கப்பட்டன. ஆனந்த்பூர் சாகிப் வட்டாரத்தில் கேஷ்கர், ஃபதேகர், லாப்கர் மற்றும் ஆனந்த்கர் என்ற நான்கு கோட்டைகளைக் கட்டினார். இங்கு ஆயுதத் தயாரிப்பு மற்றும் ஆயுதப் பாதுகாப்புக்கான இடங்களை ஏற்படுத்தினார். எதிரிகளிடமிருந்து சீக்கியர்களைக் காத்துக்கொள்ளவும் அநீதி மற்றும் கொடுங்கோன்மைக்கு எதிராகப் போரிடும் வலிமையுடைய சமயமாக சீக்கிய மதத்தை மாற்றவும், கால்சா (பவித்திரமான) என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பினரை அகாலி (இறவாதவன்) என்று அழைத்தார்.

சீக்கிய மதத்தில் பஞ்சக உள்ளிட்ட சில கோட்பாடுகளையும் வகுத்தார். சீக்கிய ஆண்கள் தலைப்பாகை வைத்திருக்கும் பழக்கத்தை வகுத்தார். சீக்கியர்கள் அனைவரும் சிங்கம் போன்ற வலிமையும், சுயமரியாதையும் உடையவர்கள் என்று முழங்கினார். பிற்காலச் சீக்கிய மதக் கோட்பாடுகளுக்கு வித்திட்டார். சீக்கியத்தின் பல கூறுகளை உறுதிப்படுத்தியதுடன் சீக்கிய மத நூலான குரு கிரந்த் சாஹிபை சீக்கிய மதத்தின் வாழும் குருவாக்கினார்.

சீக்கிய குரு பதவிக்காக அவ்வப்போது ஏற்பட்ட மதப் பூசல்களைத் தடுப்பதற்காக ஒற்றை குரு முறையை நீக்கினார். குரு கிரந்த் சாஹிப்பின் ‘தஸம் கிரந்த்’ என்ற கடைசி பாகத்தை இவரே எழுதினார். ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றின் சில பகுதிகளையும், சண்டி சரிதர், பகவதி தீவார், ராம் அவதார், துர்க ஸப்தஸதி ஆகிய நூல்களையும் பஞ்சாபி மொழியில் மொழிபெயர்த்தார். 1698-ல் ‘பச்சிட்டார் நாடக்’ என்ற சுயசரிதையை எழுதினார். தான் இறப்பதற்கு முன் குரு கிரந்த் சாஹிப்தான் இனி சீக்கியர்களின் குரு என்று அறிவித்தார். ஆன்மிக குரு, போர் வீரர், கவிஞர், சீக்கியர்களின் கடைசி குருவுமான குரு கோவிந்த் சிங் 1708-ம் ஆண்டு 42-வது வயதில் மறைந்தார்.

கோட்பாடுகள்

• சீக்கியர்கள் உருவ வழிபாடு செய்வதில்லை. ஞானிகள் மதகுருமார்களின் புகழையும், அவர்களது அறிவுரைகளையும் போற்றிப்பாடுகிறார்கள். தங்களுடைய மதகுருவிடம் மிகுந்த பக்தியும் அர்ப்பணிப்பும் கொள்வதில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்ததால் இந்த மதம் சீக்கிய மதம் என்று அழைக்கப்படுகிறது. சீக் என்றால் சிஷ்யன் அல்லது சீடன் என்பது பொருள். சீக்கியர்கள் சாதி வேறுபாடுகளில் நம்பிக்கை கொள்வதில்லை.
• சீக்கியர்கள் கடவுளை ஜோதிவடிவமாக வழிபடுகிறார்கள். ஜோதி தியானம் அவர்களது முக்கியமான வழிபாட்டு முறையாகும். கடவுள் ஒருவரே. அவர் சத்புருஷர்; அவரே இவ்வுலகை படைத்துக் காப்பவர்; அவரே பரிபூரணர்.
சீக்கிய மதத்தில் கடவுள் கோட்பாடு.

மூல மந்திரம். சீக்கிய மதத்தின் அடிப்படை சமயக் கோட்பாடு.

சீக்கிய மத கடவுள் கோட்பாடு குறித்து எந்தவொரு சீக்கியரினாலும் கொடுக்க முடிந்த மிகச்சிறந்த குறிப்பு மூல மந்திரம் ஆகும். சீக்கிய மதத்தின் அடிப்படை கோட்பாடாகிய  இது ஸ்ரீ குரு கரந்த் சாகிப் இன் ஆரம்ப பகுதியில் வருகிறது.

இது ஸ்ரீ குரு கரந்த் சாகிப் இல் ஜபுஜி எனும் முதல் பாகத்தின் முதல் வசனத்திலிருந்து வருகிறது.

ஒரு கடவுள் மட்டுமே இருக்கிறார். அவர் சத்தியம் என்றும், படைப்பாளன் என்றும், அச்சத்திலிருந்தும் வெறுப்பிலிருந்தும் அற்றவர் என்றும், இறப்படையாத நிரந்தரமானவர் என்றும், பிரப்படையாதவர் என்றும், Self-Existent, சிறந்தவர் மற்றும் கருணையாளர்  என்றும் அழைக்கப்படுகிறார்.

சீக்கிய மதம் ஒரே கடவுளை (ஏக இறைவனை) நம்பும் ஒரு மதமாகும்.

சீக்கிய மதம் சீக்கியர்களை ஏக இறைவனை (ஓரிறை கொள்கையை) வணங்கும்படி உறுதியாக கட்டளையிடுகிறது. மேலும் அது உருவமற்ற ஒரு ஏக இறைவனை மட்டும் நம்புகிறது. அதனை "ஏக் ஓம்காரா" என்பார்கள்.

மேலும் உணரமுடிந்த இறைவனை "ஓம்காரா" என்று அழைப்பதுடன் அவனுக்கு பல சிறப்புப்பெயர்களையும் அளிக்கிறது. அவையாவன.

கர்தர்- படைப்பாளன். 
அகல்- நிலையானவன்.
சத்தனமா- புனிதப்பெயர்.
சாஹிப்- கடவுள்.
பர்வர்திகர்- பேணிக்காப்பவன்.
ரஹீம்- கருணையாளன்.
கரீம்- அன்பாளன்.

அவர் வாஹி குரு என்றும் அழைக்கப்படுகிறார். அதாவது மெய் ஏக தேவன். சீக்கிய மதம் ஓரிறை கொள்கையை வலியுறுத்துவது மட்டுமன்றி அவதாரத்தை நம்புவதும் இல்லை. அதாவது கடவுள் மனிதனாக அவதாரம் எடுப்பதில்லை என்பது. கடவுள் அவனாக உருவெடுத்து வருவதில்லை. சீக்கிய மதம் கூட உறுதியாக சிலை வணக்கத்திற்கு எதிராக உள்ள மதமாகும். குரு நானக் சண்ட் கபீர் இனால் செல்வக்குடையவராய் காணப்பட்டார். குரு நானக் சண்ட் கபீர் இன் சொற்கருத்துக்களினால் மிகவும் செல்வக்குடையவராய் காணப்பட்டார். ஸ்ரீ குரு கரந்த் சாகிப் இன் பல அத்தியாயங்கள் சண்ட் கபீர் இன் இணைப்புகளை கொண்டிருந்தது. 

சண்ட் கபீரின் ஒரு புகழ்பெற்ற ஓர் இணைப்பு கீழே தரப்படுகிறது.

"துக் மெய்ன் சுமிரன சப் கரெயன்
சுக்ஹ் மெய்ன் கரெயன் நா கொயா 
ஜோ சுக்ஹ் மெய்ன் சுமிரன கரெயன்
டு துக் கயே ஹொயே?"
"துன்பங்களின்போது கடவுள் அனைவராலும் நினைவூட்டப்படுகிறார்.
ஆனால், அமைதியின்போதும் இன்பங்களின்போதும் அவரை எவரும் நினைவூட்டுவதில்லை.
கடவுள் நல்ல நேரமாகிய இன்பத்தின்போது நினைவூட்டப்படுவாரயின்
ஏன் துன்பங்கள் வரவேண்டும்? 

இதை கீழ்வரும் குரான் வசனத்துடன் ஒன்றித்து பாருங்கள்:

மனிதனுக்கு ஏதேனும் ஒரு தீங்கு வந்துவிட்டால், அவன் தன் இறைவனின் பக்கம் திரும்பி அவனை அழைக்கின்றான். பிறகு அவனுடைய இறைவன் அவன் மீது தன் அருட்கொடையை வழங்கினால், முன்பு எந்தத் துன்பத்தை நீக்கும்படி இறைஞ்சிக் கொண்டிருந்தானோ அந்தத் துன்பத்தை அவன் மறந்து விடுகின்றான். மேலும், அல்லாஹ்வுடன் மற்றவர்களை இணையாக்குகின்றான். அவனுடைய வழியைவிட்டுத் தவறச் செய்வதற்காக! (நபியே!) அந்த மனிதனிடம் கூறும்: “நீ உனது நிராகரிப்பின் மூலம் சிறிது நாட்கள் இன்பம் அனுபவித்துக்கொள். திண்ணமாக நீ நரகத்திற்குச் செல்பவன் ஆவாய்.”

ஆகவே சீக்கிய வேதங்கள் ஏக இறை கோட்பாட்டை உறுதியாக தெளிவுபடுத்துகிறது.

சீக்கியர்களுக்கு மூன்று முக்கிய கடமைகள்

குருவைத் தியானம் செய்ய வேண்டும் கண்ணியமாகவும், நேர்மையாகவும் பணியாற்ற வேண்டும.  தான்  பெற்ற பலன்களை மற்றவர்களுடன்  பகிர்ந்து  கொள்ள வேண்டும். இதுவே அவர் வழிகாட்டிய கடமைகள் ஆகும். பத்தாவது குருவான கோவிந்த சிங் தனக்குப் பின் குருவாக சீக்கிய குருக்களின் போதனைகளை எழுத்துவடிவமாக தொகுக்கப்பட்ட நூலினை அறிவித்தார். அதனால் குரு கிரந்த் சாகிப் என்று அழைக்கப்படும் அந்நூலானது பதினோராவது குருவாக சீக்கியர்களால் மதிக்கப்படுகிறது. புனித நூலாக விளங்கும்குரு கிரந்த சாகிப்  சீக்கிர்களின் முக்கிய வழிகாட்டியாகவும் திகழ்கிறது.

சீக்கிய குருக்களில் பத்தாவதும், கடைசியுமான சுரு, தனக்கு அடுத்த குருவாகத் தேர்வு செய்தது ‘குரு கிரந்த சாகிப்’ நூலையே.  சீக்கிய குருக்களால் தொகுக்கப்பட்ட இந்த நூல் அதன் அசல் வடிவிலேயே இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சீக்கியர்களின் ஆராதனைக் கூட்டங்களில்சீக்கியர் அல்லாதோரும் கலந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜபுஜி

குரு கிரந்த சாகிபின் உயிர்நாடியாக இருப்பது ஜபுஜி என்னும் தோத்திரப் பாக்கள் ஆகும் அந்தப் பாக்களின் உயிர்நாடியாக விளங்குவது மூலமந்திரம் என்னும் சூத்திரமாகும் ஜபுஜி என்பது மூல மந்திரத்தின் விரிவே என்று சீக்கிய ஆசிரியர்கள் பலர் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஜபுஜியிலுள்ள மூல மந்திரம் வருமாறு :

ஏக் ஓம்காரா, சத்நாம், அஜனி, சைபாம், கர்த்தா புரூக், நிர்ப்பய நிர்வைர, அகால முரத், குரு பிரசாத்.


ஏக்  ஓம்காரா: புலப்பட்டும் புலப்படாமலும் இருப்பவன்  இறைவன்
சத்நாம்: சத்தியம் என்னும் பெயர் தரித்தவன்
அஜனி: பிறவாதவன்
சைபாம்: சுயமாகத் தோன்றியவன் 
கர்த்தா புரூக்: சிருஷ்டி கர்த்தா
நிர்ப்பய நிர்வைர: பயமில்லாதவன்
அகால முரத்: மரணம்  அவனை பதிப்பது இல்லை
குரு பிரசாத்: குருவினை போல அருளுடையவன்

இந்த மூல மந்திரம் என்பது கடவுளைச் சந்தித்துத் திரும்பியபின், அவர் கட்டளைப்படி குருநானக் பாடியதாக,பர்காஷ்சிங் என்னும் ஆசிரியர் தாம் எழுதியிருக்கும் குருநானக்கும் அவரது ஜபுஜியும் என்னும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

இறைத் தத்துவம் 

இறையருள் பெற்ற குரு மூலம் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை அறிந்து அவனை அடைய முயல்வது மனித வாழ்வில் குறிக்கோள் என்று சீக்கிய சமயம் கூறுகிறது.

ஆகவே பக்தியின் மூலம் இறைவனை அறிவதும் அறிந்த பின் இறைவனை அடைவதற்குரிய கடமைகளை இதயப் பூர்வமாக செய்வதும் சீக்கிய சமயத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் ஆகும். கடவுள் ஒருவர் உண்டு என்றால் அவர் எத்தகையவர் என்பதை ஒவ்வொரு சமயமும் வரையறை செய்து கொண்டுள்ளது. சில சமயத்தினர் கடவுள் அவதாரம் எடுப்பார் என்று கூறுகின்றனர். வைணவ சமயமும், கிறிஸ்துவ சமயமும், கடவுள் அவதாரம் எடுப்பார் என்பதை ஒப்புக் கொள்கின்றன. சைவ சமயம், இஸ்லாமிய சமயம், சீக்கிய சமயம் ஆகிய மூன்று கடவுள் அவதாரம் எடுப்பார் என்பதை ஒப்புகொள்ளவில்லை. ஜைனர்கள் கடவுள் ஒருவர் உண்டு என்பதை ஒப்புக்கொள்ளவில்லை. கடவுள் ஒருவர் இருக்கிறாரா இல்லையா? என்பதை பற்றிப் பௌத்தர்கள் கவலைப்படவில்லை.

இஸ்லாமிய சமயத்தைப் போல சீக்கிய சமயமும் கடவுள் ஒருவர் உண்டு என்பதை உறுதியாக ஒப்புக் கொள்கிறது. கடவுள் அவதாரம் எடுப்பார் என்பதை இந்த இரு  மதங்களும் ஒப்புக்கொள்ளவில்லை. உருவ வழிப்பாட்டை இஸ்லாமிய சமயமும் ஆதரிக்கவில்லை, சீக்கிய சமயமும் ஆதரிக்கவில்லை. இருப்பினும் வழிபாட்டு முறையில் இரு சமயங்களும் வேறுபடுகின்றன. இசை கலந்த இனிய பாடல்கள் பாடி இறைவனை துதித்து வழிபாடு செய்வதை சீக்கிய சமயம் அங்கீகரிக்கிறது.  இஸ்லாமிய சமயம் அந்த முறையை ஆதரிக்கவில்லை. எனவே இறைத் தத்துவம் கிரித்தும் இறை வழிப்பாடு குரித்ஹும் மதங்களிடையே கருத்து வேற்றுமைகள் உண்டு என்பதை நினைவில் வைத்துக்கொண்டு சீக்கிய சமயம் கூறும் இறைத்தத்துவத்தையும் வழிப்பாட்டு முறையையும் பார்க்கலாம்.

குறு கிரந்த சாகிபின் உயிர்நாடியாக இருப்பது ஜபுஜி என்னும் தோத்திரப் பாக்கள் ஆகும். அந்தப் பாக்களின் உயிர்நாடியாக விளங்குவது மூலமந்திரம் என்னும் சூத்திரமாகும். ஜபுஜி என்பது மூல மந்திரத்தின் விரிவே என்று சீக்கிய ஆசிரியர்கள் பலர் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

சீக்கியகுருக்களின் பட்டியல்

குரு நானக் சாகிப்
குரு அங்கட் சாகிப்
குரு அமர் தாஸ் சாகிப்
குரு ராம் தாஸ் சாகிப்
குரு அர்ஜூன் சாகிப்
குரு அர்கோவிந்த் சாகிப்
குரு ஹர் ராய் சாகிப்
குரு ஹர் கிருஷ்ணன் சாகிப்
குரு தேக் பகதூர் சாகிப்
குரு கோபிந்த் சிங் சாகிப்
குரு கிரந்த சாகிப்

சீக்கியர்களின் தினசரி பிரார்த்தனைகளில் மனித இனத்தின் நல்வாழ்வும் அடங்கி இருப்பது வியப்பளிக்கும் உண்மை. 

1675-ஆம் ஆண்டு டில்லியில் மிகப் பெரிய அளவில் மத வன்முறைகள் நடந்தன. அப்போது இந்துக்களைக் காப்பாற்றுவதற்காக ஒன்பதாவது குரு, குரு தேக் பகதூர் என்பவர் வீரமரணம் அடைந்தார். சமய வேறுபாடின்றி மக்கள் நலனையே முக்கிய குறிக்கோளாகக் கொண்டுள்ளது சீக்கிய சமயம் என்பதற்கு இதுவொரு சிறந்த உதாரணம்.

உலக வாழ்வைத் துறந்து துறவற வாழ்வை வாழுமாறு சீக்கியம் கூறவில்லை. முறையாக ஒரு நல்ல வாழ்க்கையை வாழுமாறு சீக்கியர்கள் வலியுறுத்தப்படுகிறார்கள். குருத்துவாராக்களில் முக்கிய நிகழ்வாக அனுசரிக்கப்படுவது சேவா என்னும் சேவை ஆகும்.  அதாவது எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், பொருளாதார ஏற்றத்தாழ்வு இருந்தாலும் அனைவரையும் ஒரே மாதிரியாகக் கருதி வங்கார் என்னும் அனைவருக்கும் உணவு வழங்கப்படுவது ஒரு சிறப்பான அம்சமாகும்.

சீக்கிய அடையாளங்கள்

சீக்கிய சமயத்தின் பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங் 1699 -ஆம் ஆண்டில், பைசக்தி நாளில் அமிரித் சன்ஸ்கரில், எல்லா தீட்சைப் பெற்ற சீக்கியர்களும் (கால்சா சீக்கியம் என்றும் அழைக்கப்படுகிறது) நம்பிக்கையின் அடையாளமாக ஐந்து பொருட்களை எல்லா நேரங்களிலும் அணிய வேண்டும் என்று கட்டளையிட்டார். இதை “ஐந்து கே” க்கள், அல்லது “பஞ்ச காக்கர்/காக்கி” என்று சொல்கிறார்கள். 
o தீட்சைப் பெற்ற சீக்கியர்கள் முக்கியமாக முடியை வெட்டிக் கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை.  பொதுவாக கேசம் கட்டப்பட்டு, சுருட்டி சீக்கிய தலைப்பாகைக்குள் வைக்கப்பட்டிருக்கும். 
o    மரத்தாலான சீப்பு பயன்படுத்த வேண்டும்.
o    இடுப்பில் இருந்து முட்வெரை அணிந்திருக்கும் ஆடை, வெள்ளை நிறத்திலிருப்பது அவசியம்.
o    போரின்போது பயன்படக்கூடியதான வெண்கலக் கைவாள் வைத்திருப்பது முக்கியம்.
o    ஓன்று முதல் முன்று அடி நீளமுள்ள வளைவான கத்தி அல்லது சிறிய கூர்மையான கத்தியை வைத்திருக்க வேண்டும்.

இப்படியொரு கலாச்சாரம் சீக்கிய மதத்தில் காணப்படுகிறது.

பத்தாவது சீக்கிய குரு 1699-ஆம் ஆண்டு இக்கட்டளைகளைப் பிறப்பித்தார். சீக்கியர்களின் நோக்கம்,  அடையாளம் போன்றவற்றை வெள்ப்படுத்த இச்சின்னங்கள் அனுசரிக்கப்படுகின்றன. தங்களுக்கென்று சொந்தாமான இசைக்கருவிகளை சீக்கியர்கள் உருவாக்கியுள்ளனர் ரபாப், தில்ரூபா, டாவஸ், ஸோரி மற்றும் சாரிண்டா என்பன அக்கருவிகள் ஆகும். சீக்கியர்கள் தங்களுக்கென்று புதிய கட்டடக் கலையை உருவாக்கி உள்ளனர். இக்கட்டடக் கலையின் முக்கிய சின்னமாக விளங்குவது சுருத்வாராக்கள்.

சீக்கியம் ஒரு  மதமாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்த இயக்கமாகவும் விளங்குகிறது.  இது மதம் கிடையாது, ஒரு சீர்திருத்த இயக்கம் மட்டுமே என்று மேலை நாட்டு ஆய்வாளர்கள் சிலரும், இந்து சமயத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் சிலரும் குறிப்பிடுகின்றனர்.

ஆனால், சீக்கியர்கள் இதை ஒப்புக் கொள்வது கிடையாது அதனை மதம் என்தே அவர்கள் திடமாக நம்புகிறார்கள். தங்கள் மதத்தை நிறுவிய குருநானக் இறையருள் நிரம்பியவர் என்றும், இறைவன் கொடுத்த அமிர்தத்தைப் பருகியவர் என்றும், எனவே சீக்கியம் ஒரு மதமே என்றும் விளக்கமளிக்கிறார்கள். பக்தியின் மூலம் இறைவனை அறிவதும், அறிந்த பின் இறைவனை அடைவதற்குரிய கடமைகளை இதயப் பூர்வமாக செய்வதும் சீக்கிய சமயத்தின் அடிப்படைக் கோட்பாடுகள். கடவுள் ஒருவர் என்பதை ஏற்றுக்கொள்ளும் சீக்கிய சமயம், அவர் அவதாரம் எடுப்பார் என்பதை நம்பவில்லை.

குருநானக் சுல்தான்பூர் என்னுட் இடத்தில் வசித்தப்போது அதனருகில் உள்ள பின் என்னும் ஆற்றில் நாள்தோறும் குளிக்கச் செல்வது வழக்கம் ஒரு நாள் வழக்கம் போல் குருநானக் பீன் ஆற்றில் குளிக்க சென்றபோது திடீரென்று மறைந்து போனார்.  மூன்று தினங்கள் வரை அவரைக் காணவில்லை.

அப்போது அவர் கடவுளிடம் போய்ச் சேர்ந்தார் என்றும், ஒரு அமிர்தத்தைக் கொடுத்து கடவுள் பருகச் சொன்னார் என்றும் கூறப்படுகிறது.  இருபத்தேழே வயதான குருநானக்கிற்று இறையருள் கிடைத்தது.  தனது திருநாமத்தைக் கூறி சீடர்களுக்குக் கற்பிக்கும் படி கடவுள் இட்ட ஆணையை ஏற்று மூலமந்திரத்தை அவர் இயற்றினார் என்பது சீக்கியர்களின் நம்பிக்கை.

இந்த மூலமந்திரம் ஜபுஜி என்று அழைக்கப்படுகிறது. சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த சாகிப், ஜபுஜியுடன் தான் ஆரம்பமாகிறது.  இந்த மூலமந்திரத்தை சீக்கியர்கள் ஒவ்வொருவரும் தினமும் காலையில் பாராயணம் செய்ய வேண்டிய கடமை.

நான் என்னும் ஆணவத்தை விட்டு பக்திப் பாடல் தொழுகை, சேவை மூலம் ஆத்மா பெறும் என்னும் நம்பிக்கையை சீக்கிய சமயம் கொண்டுள்ளது. அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு ஒரு தடவையாவது யாத்திரை செல்ல வேண்டும் என்றும் அது கற்பிக்கிறது.

சிங்

கடைசி மனித குருவாகிய கோபின் சிங் ‘காஸ்லா’ [பரிசுத்தவான்கள்] என்றழைக்கப்படும் ஒரு அமைப்பையும்கூட உருவாக்கினார். இது மத சம்பந்தமான கொள்கைகளுக்கு தங்கள் வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணிக்க மனமுள்ளவர்களாக இருக்கும் சீக்கியர்களின் ஒரு விசேஷித்த சகோதரத்துவமாக இருக்கிறது. தங்களின் முந்தைய குடும்ப பெயர்கள் குறித்துக் காட்டும் எந்த ஜாதி வேறுபாடுகளையும் ஒழிப்பதற்காக, காஸ்லா உறுப்பினர்கள் “சிங்கம்” என்ற அர்த்தங்கொள்ளும் ‘சிங்’ என்ற சிறப்புப் பெயரை எடுத்துக் கொள்கிறார்கள். காஸ்லாவின் பெண் உறுப்பினர்கள் [பெண் சிங்கம் மற்றும் இளவரசி] என்ற அர்த்தமுள்ள ‘கார்’ என்ற சிறப்புப் பெயரை வைத்துக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட சிறப்புப் பெயர்களை தொடர்ந்து, அடையாளங் காட்டும் குடும்பப் பெயரை வைத்துக் கொள்கிறார்கள்.

பொற்கோயில் (Golden Temple)

சண்டிகரில் இருந்து 235 கிமீ. தோலைவில் அமைந்துள்ளது அமிர்தசரஸ் இங்குள்ள குளம் ஒன்றின் மையத்தில் அமைந்துள்ளது சீக்கியர்களின் வழிபாட்டு மையமான பொற்கோயில்.


1574 ல் முதலில் கட்டப்பட்ட குருத்வாரா தளம் ஒரு மெல்லிய காட்டில் ஒரு சிறிய ஏரியால் சூழப்பட்டிருந்தது. அருகாமையில் உள்ள கோயிந்தவால் என்ற பகுதிக்கு வந்த மொகலாய பேரரசர் அக்பர், மூன்றாவது சீக்கிய குரு, குரு அமர் தாஸின் வாழ்க்கை வழிமுறையால் ஈர்க்கப்பட்டு சாகிர்(நிலம் மற்றும் பல கிராமங்களின் வருவாய்) கொடுத்தார். குரு ராம் தாஸ் அந்த ஏரியை விரிவுபடுத்தி அதை சுற்றி ஒரு சிறிய குடியிருப்பு கட்டினார்.

ஹர்மந்திர் சாஹிப் (Harmandir Sahib) என்பது சீக்கிய மக்களின் ஒரு முக்கிய கலாச்சார மையமாகும். சீக்கியர்களின் மிகப் பழமையான குருத்வார் (கோயில்) ஆகும். சீக்கியர்களின் நான்காம் குருவான குரு ராம் தாஸ் என்பவரால் அமைக்கப்பட்ட இக்கோயில் இந்தியாவில் அம்ரித்சர் நகரில் அமைந்துள்ளது. 1604 ஆம் ஆண்டில், குரு அர்ஜுன் சீக்கிய புனித நூலான ஆதி கிரந்தத்தை முடித்து குருத்வாராவில் அதை நிறுவினார். 

ஹர்மந்திர் சாஹிப் சீக்கியர்களின் புனித தலமாகும். சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாகிப் , இங்கு வைக்கப்பட்டுள்ளது . இந்த புனித கோயில் , ஜாதி மத பேதமின்றி அணைத்து மக்களும் வந்து வழிபட வேண்டுமென்று அமைக்கப்பட்டதாகும்.

ஹர்மந்திர் சாஹிப்பிற்குள் நுழைய நான்கு கதவுகள் உள்ளன. இது அனைத்து மக்கள் மற்றும் சமயங்களின் மீதான சீக்கியர்களின் வெளிப்படைத்தன்மையை பறைசாற்றும் சின்னமாக உள்ளது. இன்றைய நிலையில் உள்ள குருத்வாரா, ஜஸ்ஸா சிங் அலுவாலியாவினால் மற்ற சீக்கிய படையணி உதவியுடன் 1764 இல் மீண்டும் கட்டப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில், மகாராஜா ரஞ்சித் சிங், வெளி தாக்குதலில் இருந்து பஞ்சாப் பகுதியியை பாதுகாத்து குருத்வாராவின் மேல் மாடிகளை தங்கத்தினால் மூடினார். இதுவே அதன் தனித்துவமான தோற்றதிற்கும் அதன் ஆங்கில பெயருக்கும் (Golden Temple) காரணமாகிறது. 

ஹரிமந்திர் சாஹிப் சீக்கியர்களால் புனிதமானதாக கருதப்படுகிறது. சீக்கிய புனித நூலான குரு கிரந்த் சாகிப், எப்போதும் குருத்வாரா உள்ளே இருக்கும். இதன் கட்டுமானத்தின் முக்கிய நோக்கம் வாழ்வின் அனைத்து துறைகளிலும் அனைத்து மதங்களையும் சார்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் சமமாக வந்து கடவுளை வழிபட ஒரு இடத்தை உருவாக்குவதாகும். 100,000-க்கும் மேற்பட்ட மக்கள் தினமும் இங்கு வழிபாடு செய்கின்றனர்.

குரு அமப்தேவின் சிந்தையில் உருவான இக்கோயிலின் பிரதான மண்டபம் கட்டி முடிக்கப்படும் முன்னரே குளக்கரைச் சுற்றுச் சுவர் கட்டிமுடிக்கப்பட்டுவிட்டது. மன்னர் ரஞ்சித் சிங் காலத்தில் இது புனரமைப்பு செய்யப்பட்டு பிரம்மாண்ட கோயில் உருவானது. இந்து மற்றும் இஸ்லாமிய கட்டிடக் கலை மிளிரும் இக்கோயிலின் நான்கு புறங்களிலும் தியோரி என்று அழைக்கப்படும் நான்கு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பிரகாரத்தில் இருந்து ஹர் கி பாரே என்னும் கடவுளைத் தரிசிக்கச் செல்வதற்கு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் பிரதான அம்சமாக விளங்குவது இதன் தங்க கோபுரம்.

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com