மத அரசியல்-58: சிவனியம்

மத அரசியல்-58: சிவனியம்

சிவனியம் (Sivaniyam)

தற்போதுள்ள இந்திய துணைக்கண்டத்தின் கீழே உள்ள பகுதி தான் தென்னாடு என்று பாவாணர் அறுதியிட்டு கூறுகிறார். இந்த நாட்டில் தான் சிவனியம் தோன்றி உலகமெங்கும் பரவியது. இங்கிருந்து சென்ற தமிழர்கள் தான் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று இறைக் கொள்கையை பரப்பினர். இதை உறுதி செய்யும் விதமாகத் தான் 1300 ஆண்டுகளுக்கு முன்பு மாணிக்கவாசகர் தென்னாடுடைய சிவனே போற்றி எனவும் அவரே உலகில் உள்ள எல்லா நாட்டினருக்கும் இறைவன் என்றும் பாடினார். இன்று எல்லா மதங்களின் தெய்வமும் சிவனே என்று கூறுயுள்ளனர் தமிழ்ச் சித்தர்கள். திருமூலரும் இதை உறுதி செய்யும் விதமாக ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஓரிறைக் கோட்பாட்டை வலியுறுத்தி உள்ளார்.

தமிழர் மதத்தின் முக்கிய கூறாகிய சிவனியம் தமிழை வளர்த்தது. அதே போல தமிழும் சிவனியத்தை வளர்த்தது. அதனால் தான் தமிழையும் சிவனியத்தையும் யாராலும் பிரிக்க முடியாது. தமிழ் உள்ளவரை சிவனியமும் இவ்வுலகில் வாழும். தமிழ்த் தேசத்தை எவராலும் வரலாற்றில் அழிக்க முடியாதவாறு நம் முன்னோர்கள் பாடலாக, கருத்தியலாக பாடிவிட்டு சென்றுள்ளனர். ஆரியர்களாலும் திராவிடர்களாலும் ஆயிரக்கணக்கான சிவனிய நூல்கள் அழிக்கப்பட்டாலும் இருக்கும் சில நூல்கள் சிவனியத்தையும் தமிழியத்தையும் அழியாமல் பாதுகாக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆதியோகி சிவன் சித்தர்

“சித்தராய்ப் போகுமென்று பேசிக் கொண்டு
சிவனவனும் யோசனையே செய்தார் பின்பு”

மருந்துப் பொருளைச் சிவன் என்று சொன்ன கொங்கணர் வேறொரு நூலில் சிவனைச் சித்தர் என்று கூறுகின்றதைக் காண்கிறோம்.

“தானான சிவன்தன்னைப் பாலில் போட்டுத்
தனித்துமே அடுப்பேற்றி எரித்துக் கொண்டு
ஊனான துலர்த்தியே யிடித்து நைய்ய
உருசிலை வடிகொண்டு சூரணமே செய்து” 

சிவனைப் பாலில் போட்டு அடுப்பேற்றி எரித்து நைய இடித்து உலர்த்திச் சூரணஞ் செய்து என்று போகர் உரைப்பகுதிலிருந்து சிவன் இறைவனாகவோ, சித்தனாகவோ தோன்ற நியாயமில்லை. சிவன் என்பது ஒரு பொருளின் பெயர் என்பது தெளியும்.

“தானென்ற மூவருக்கும் வயது இந்தத்
தகைமையுள்ள கலியுகந்தான் கடாசி தன்னில்
நானென்ற இவர்களுமே மாண்டே போவார்
நன்மையென்ற அடுத்தோர்கள் வீணாய்ப் போவார்
வானென்ற சதாசிவனும் மகேஸ் பரன்றான்
வண்மையுள்ள யுகநூறில் மாண்டே போவார்
தேனென்ற சிவன்மனையாள் பராப ரையும்
தேகம்விட்டு மாண்டிடுவாள் கேளு கேளு
மாண்டிடுவாள் நானுமந்த யுகத்திற் தானும்
மாண்டிடுவேன் சித்தரெல்லாம் மாண்டே போயி
ஆண்ட குரு பராபரத்திற் சேர்ந்தே கொள்வார்
அப்பனே இல்வாழ்க்கை சொற்ப மாகும்” 

சுப்பிரமணியர் அகத்தியர்க்கு உரைப்பதாக வரும் ஞான உபதேசத்தில், இக் கலியுக இறுதியில் சிவன், சிவனின் மனைவி, ஆகியோர் முதலிலும் பின்னர் தானும் மாண்டு போவோம் என உரைக்கக் காண்கிறோம்.

இந்த உலகில் இறைவனாக இருந்தாலும் சித்தனாக இருந்தாலும் ஒரு நாளில் மரணமடைவதற்கு உரியவர்கள் என்பதனால், புராணங்கள் கூறுவது போலும் பக்திநூல்கள் கூறுவது போலும் சிவன் எந்தக் காலத்திலும் அழியாமல் இருப்பவனல்ல என்பது விளங்கும்.

சிவன் என்னும் சொல் பல்வேறு பொருளில் பல நிலைகளில் பயன்படுத்தப் படுகின்ற சொல்லாக மருத்துவ நூல்களில் காணப்பகின்றன. என்றாலும், சித்தர்களில் ஒருவன் சிவன் என்னும் பெயரில் இருந்து வந்ததாகவும் அவனின் நினைவாக அவனுரைத்த மருந்து, ஞானம் ஆகியவற்றிற்கு அவனின் பெயர் விளங்க வழங்கி வருவதாகவும் கருத நேர்கிறது. சித்த மருத்துவத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு குழம்பிற்கு அகத்தியர் குழம்பு எனும் பெயர் வழங்கப் படுகிறது. அந்த மருந்து ஏனைய மருந்துகளிலிருந்து மாறுபட்ட மருந்தாகவும் எல்லா நோயையும் போக்கக் கூடிய மருந்தாகவும் உரைக்கப்படுவது நினைவிற் கொள்ளத் தக்கது.

இலக்கியங்களில் சிவன்

முக்கண் செல்வன் கரை மிடற்றண்ணல் காரி உண்டிக் கடவுள் தாழ் சடையன் புரமெரித்தோன் கொன்றை மாலையன் ஆலமர் கடவுள்.

மேலே குறிக்கப் பெற்ற அத்தனையும் சிவனைக் குறிப்பனவே. என்ன காரணத்தினாலேயோ ‘சிவன்’ என்னும் பெயரால் குறிக்காமல் இத்தகைய குறிப்பால் குறிக்கும் மரபினைப் புலவர் கையாண்டனர் என்பது வியப்பளிப்ப தாகும் என்பர். மேற்கண்ட அனைத்தும் சிவனின் செயல்தான் என்பதற்கான எந்தச்சான்றினையும் காட்டவில்லை. முக்கண் செல்வன், கரை மிடற்றண்ணல், காரி உண்டிக் கடவுள், தாழ் சடையன், புரமெரித்தோன், கொன்றை மாலையன், ஆலமர் கடவுள் என்பன வெல்லாம் சிவனுக்கு மட்டுமே உரியதெனக் கருதுவதில் நியாயமுண்டு.

“சேயோன் மேய மைவரை யுலகம்” எனத் தொல்காப்பியம் குறிப்பது சிவனையேயாதல் வேண்டும்.

புராணம் குறிப்பிடும் சிவனும், இலக்கண இலக்கியம் காட்டும் குறிப்புகளும் ஒருவரையே குறிப்பிடுகின்றன என்பது பொருந்தாது. புராணங் குறித்த காலமும் இலக்கண இலக்கிய காலமும் வேறு வேறானவை. நீண்ட இடைவெளியைக் கொண்டவை என்பதால் இவ்வாறு கருதத் தோன்றுகிறது.

சிவன் பண்டு தியானம் கருதி மலையைத் தேர்ந்தவன். தென்னகத்தின் பொதியமும், வடக்கில் கயிலையும் அவன் சேர்ந்த மலைகள். சிவன் புலித் தோலையும் யானைத் தோலையும் உடுத்தியவன் என்பதிலிருந்து பனிக்காக இவ்வாடைகளைத் தேர்ந்தான் என அறிகின்றோம். சாம்பலைத் தண்ணீரில் குழைத்து உடம்பெல்லாம் பூசிக் கொள்ள எப்படிப் பட்ட குளிர் பாதிப்பும் ஏற்படாது. சிவன் இப்பழக்கம் மேற் கொண்டவன். காலப்போக்கில் சாம்பல் சமயச் சின்னமாகிய திருநீறாகியது. தியானம் யோகம் கற்பம் போன்ற முறைகளைக் கையாள சாத்வீக உணவையே கொள்ளுதல் வேண்டும். சிவன் மேற் கொண்ட உணவுமுறை இதுவே. சிவனை வழிபடு வோர் சைவர் எனப்பட்டது போல, உணவில் சிவன் கண்ட முறையும் காலப் போக்கில் சைவம் ஆனது என்பர்.

சிவன் தியானத்திற்காக மலையைத் தேர்ந்து, பொதிகைக்கும் கயிலைக்கும் சென்றான் என்பது பொருந் தாது. சிவன், கடல் கொண்ட குமரி நாட்டில் பஃறுளி ஆற்றங் கரையில் இருந்த தென் மதுரையில் நடைபெற்ற முதற் தமிழ்ச் சங்கத்தின் தலைவன். இது கி.மு. 10490 என்று கருதுவர்.

திருநீலகண்ட யாழ்ப்பாணர் மதுரையில் முதல்நாள் கோயில் வாயிலில் நின்று பாடினார். திருவாரூரிலும், அங்ஙனமே கோவில் வாயிலில் நின்று பாட, அதன்பின் அவர்க்கு வடதிசைக்கண் வேறு வாயில் தனியாக வகுக்கப்பட்டது. திருக்காழியிற் சம்பந்தர் அவரைக் கோயிற் புறமுன்றிற்குக் கொண்டு சென்று கும்பிடு வித்தார்.

      "நண்ணிய கீர்த்தி நலங்கொள் கேள்வி
      நான்மறை ஞானசம் பந்தன் சொன்ன
      பண்ணியல் பாடல்.................."
 
     "பொன்புடை சூழ்தரு மாடக் காழிப்
      பூசுரன் ஞானசம் பந்தன் சொன்ன
      இன்புடைப் பாடல்கள் பத்தும்......."
 
     "கண்டல்கள் மிண்டிய கானற் காழிக்
      கவுணியன் ஞானசம் பந்தன் சொன்ன
      கொண்டினிதா விசைபாடி........"

எனவும், பிறவாறும் சம்பந்தர் தம் தேவாரப் பதிகந்தொறும் இறுதி யில் தம்மைப்பற்றிக் குறித்துள்ள முறைமையையும், அப்பர் சுந்தரர் தேவாரப் பாடல்களையும், நோக்கின்,
     "சம்பந்தன் தன்னைப் பாடினான்
      சுந்தரன் பொன்னைப் பாடினான்
      என்னப்பன் என்னைப் பாடினான்"

என்று இறைவன் கூற்றாகக் கூறும் மக்கள் சொலவடை ஓரளவு பொருத்த முள்ளதாகவே தோன்றுகின்றது.

முத்தொழிற் சிவனை அழிப்புத் திருமேனியாகவும், முத் தொழின் மாலைக் காப்புத் திருமேனியாகவும், ஆரியர் வகுத்தத னாலும் மாலியம் தமிழகத்தில் வரவர வளர்ந்து வந்திருக்கின்றது என்னலாம். இராமாயண பாரதக் கதைகளும் இதற்குப் பெரிதும் துணை செய்திருக்கின்றன.

தொல்காப்பியர் பொருள் அதிகாரத்தில் நால்வகை நிலங்கள் பற்றிக் கூறும்பொழுது :

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே

என்று நூற்பா செய்தார்.  

மாலியரான தொல்காப்பியர், சேயோனும் குறிஞ்சியும் முத லாகச் சொல்லவேண்டிய திணைகளை, கி.மு. 7ஆம் நூற்றாண்டிலேயே மாயோனும் முல்லையும் முதலாகச் சொல்லிவிட்டார். தமிழச் சிறுபிள்ளைகட் கெல்லாம், கடைக்கழகக் காலத்திற்கு முன்பிருந்தே, மதவேறுபாடின்றி ஐம்படைத்தாலி காப்பணியாக அணியப்பட்டு வந்திருக்கின்றது. நம்மாழ்வார் காலத்திற்குப் பின் நெடுங்கணக்கு அரிச்சுவடி என்று பெயர் பெற்றுவிட்டது. இடைக்காலத்தில், 'அரி ஓம் நம' என்று தொடங்கி எழுத்தறிவிக்கப்பட்டதாகத் தெரிகின்றது.  இக்காலத்தில், சமணம் புத்தம் ஆகிய வடநாட்டு மதங்களைத் தழுவிய ஒருசிலரும், கிறித்தவம், இசலாம் ஆகிய மேனாட்டு மதங் களைத் தழுவிய பெருங்கூட்டத்தாரும், தமிழருள் உள்ளனர்.

குறள்களில் கூறப்பெறும் எண்குணக் கருத்துகள் தனித்தனியே விளக்கப்பெற்ற பின்னை, அவற்றை மேலும் ஒரு குறளில் தொகுப்பாக விளக்கத் தேவையில்லை. அது கூறியது கூறலாகச் சிறப்பிழக்கும். எனவே, முன்னர்க் கூறப்பெற்ற எட்டுக் குணங்களுக்கு மேலும் ஒரு சிறந்த உண்மையான எல்லார்க்கும் எளியவன் என்னும் சிறந்த கருத்தையே இக் குறட்பாவில் தனிப்படுத்திச் சொல்லியிருக்க வேண்டும்.

சிவனியம் கூறும் எண் குணங்களாவன:
1. தன் வயத்தனாதல் Self existence (சுவதந்த்ரத்வம்) (Absolute Self-control) 
2. தூய உடம்பினனாதல் Unmaculateness (விசுத்த தேகம்) Absolute purity)
3. Quisos a sunrisúlærir eifssö Intutive Wisdom (அநாதி பேதம்) (Absolute intution)
4. இயல்பாகவே பாசங்களி லிருந்து நீங்குதல் Freedom from the Snouses and illusions to which derived (நிராமயம்) intelligence is exposed
- (Absolute Freedom)
5. பேரருள் உடைமை Unbounded kindness (அப்த சக்தி) (Boundless grace)
6. வரம்பில் இன்பமுடைமை Infinite happiness (நித்ய திருப்தித்வம்) (Boundless grace) 
7. முற்று முணர்தல் Omni science (சர்வக்ஞத்வம்)
8. முடிவிலாற்றலுடைமை (Omnipotence)

(அனந்த சக்தி s (Omnipotence) இவற்றுள் தூய உடம்பினனாதல் என்பது
மக்களுக்குரியதாவதால், தெய்வ இறக்கம் (அவதாரம்) தொடர்புடையதாகத் தெரிகிறது. சிவனியம் தெய்வ இறக்க (அவதாரக் கொள்கை) உடையது என்பதற்கு இது சான்றாகிறது.

மாந்தனின் பிறப்பினின்றும் இறைவனின் பிறப்பு தூய்மையுடையது என்பதனைப் பிரித்துக் காட்டுதல் வேண்டித் தூய உடம்பினன் என அடை கொடுத்து மொழியப்பெற்றது.

தமிழ்நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் உள்ளதைவிடக் கோயில்கள் அதிகம் என்பர். அதாவது இந்தியாவில் உள்ள கோயில்களில் பாதிக்கோயில்கள் தமிழ்நாட்டிலும், தமிழ்நாட்டில்  உள்ள கோயில்களில் பாதிக் கோயில்கள் தஞ்சை மாவட்டத்திலும் உள்ளன என்பர். சீரழியும் தமிழ்நாட்டுத் திருக்கோயில்கள் என்ற நூலில் திரு.ப.நெடுமாறன் அவர்கள் தமிழ்நாட்டிலுள்ள மொத்தக் கோயில்கள் 32130 என்பார். தேவார மூவரால் பாடப் பெற்ற கோயில்கள் 274 என்பதும் ஆழ்வார்கள் சிறப்பித்துப் பாடிய திருமால் தலங்கள் 108 என்பதும் அறிய வேண்டிய செய்தியாகும். கோயில்கள், இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் என்ன காரணத்தினால் இவ்வாறு பெருக்கமுற்றன என்றும் எந்தெந்த காலகட்டத்தில் பெருகின என்றும் அறிவது பெரிய ஆய்விற்குட்பட்டதாகும்.

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com