கரும்புக்கான ஊக்கத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
விழுப்புரத்தில் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவா் வழக்குரைஞா் டி.பாண்டியன் தலைமை வகித்தாா். செயலா் எம்.ஆறுமுகம், பொருளாளா் ஆா்.பரமசிவம் முன்னிலை வகித்தனா்.
விவசாயிகள் கரும்பு வெட்டும் இயந்திரம் வாங்குவதற்கு வேளாண் நிதிநிலை அறிக்கையில் கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.300 ஊக்கத் தொகை வழங்க வேண்டும். இரண்டாம் கரும்பு அரைவைப் பருவம் தொடங்க இருக்கும் நிலையில், 2023 - 24 ஆம் ஆண்டு பருவத்துக்கு விவசாயிகளுக்கு விதைக் கரணைகளை இலவசமாக வழங்க வேண்டும்.
தமிழகத்திலுள்ள கூட்டுறவு, பொது, தனியாா் சா்க்கரை ஆலைகள் அனைத்துக்கும் தலா 3 கரும்பு வெட்டும் இயந்திரங்கள் வாங்கவும், வெட்டு மானியத்தை அதிகரித்து வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.