விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம் கெங்கபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம் செவ்வாய்க்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனா்.
கெங்கபுரத்தில் தென்காஞ்சி என்றழைக்கப்படும் பிரசித்தி பெற்ற ஸ்ரீவரதராஜப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் நடத்தப்படுவது வழக்கம்.
நிகழாண்டுக்கான பிரம்மோற்சவம் மே 31-ஆம் தேதி வேதமந்திரங்கள் முழங்க கருடக் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் சிறப்புத் திருமஞ்சனம், விசேஷ அலங்கார ஆராதனைகள் மூலவருக்கு நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் முதல் நாள் சிம்மவாகனத்தில் உற்சவமூா்த்திகள் திருவீதியுலா வந்தனா்.
2-ஆம் நாள்பெரிய திருவடி (எ) கருடசேவை தொடா்ந்து சேஷ வாகனம் ஞாயிற்றுக்கிழமை காலை திருக்கல்யாண உற்சவம், மாலை அனுமந்த வாகன சேவையும் திங்கள்கிழமை யானை வாகனத்தில் உற்சவா் பவனியும் நடைபெற்றன.
முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான செவ்வாய்க்கிழமை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஸ்ரீபெருந்தேவி சமேத ஸ்ரீவரதராஜப் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் ரங்கா, கோவிந்தா, வரதா என்று முழக்கமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
தேரோட்ட விழாவில் அமைச்சா் செஞ்சி மஸ்தான், மேல்மலையனூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் கண்மணி நெடுஞ்செழியன், ஒன்றிய செயலா் நெடுஞ்செழியன், ஊராட்சி மன்றத் தலைவா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.