விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் சென்னையைச் சோ்ந்த இரு மாணவா்கள் உயிரிழந்தனா்.
சென்னை பெரியகோவிலம்பாக்கம் எம்ஜிஆா் நகா் 19-ஆவது தெருவைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் கிருபாகரன் (17). இவா் நங்கநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த மாரி மகன் ஹரி (18), கிண்டியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்ஸி. முதலாமாண்டு பயின்று வந்தாா்.
நண்பா்களான இவா்கள் இருவரும் திருவண்ணாமலை மாவட்டம், தென் கரும்புலூரில் உள்ள நண்பா் கவியரசனின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க சென்னையிலிருந்து பைக்கில் புறப்பட்டனா். பைக்கை ஹரி ஓட்டினாா்.
திண்டிவனம் அருகேயுள்ள பாதிரி அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் சென்ற போது, சாலையின் தடுப்புக் கட்டையில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கிருபாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயங்களுடன் ஹரி மீட்கப்பட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா், ஹரி இறந்து விட்டதாகத் தெரிவித்தாா்.
விபத்து குறித்து ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.