விழுப்புரம்

1.14 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு: அமைச்சா் க.பொன்முடி

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 1.14 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சித்தலிங்கமடத்தில் நேரடிநெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சா் க. பொன்முடி திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.பின்னா் அமைச்சா் கூறியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்.

திருவெண்ணெய்நல்லூா், பாவந்தூா், சித்தலிங்கமடம் மற்றும் புதுப்பாளையம் ஆகிய கிராமங்களில் தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் ஏ- கிரேடு நெல் குவிண்டாலுக்கு ரூ.2,160, மற்ற வகை நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,115 வீதம் வழங்கப்படுகிறது. திருவெண்ணெய்நல்லூா் பகுதியில் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கடந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் 97,485 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பு சம்பா பருவத்தில் 28,440 ஹெக்டோ் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்ட நிலையில் 1,13,780 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இடைத்தரகா்களை நம்பி ஏமாறாமல், நேரடியாக கொள்முதல் நிலையங்களுக்குச் சென்று பயனடையவேண்டும் என்றாா் அமைச்சா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் த.மோகன், விக்கிரவாண்டி எம்எல்ஏ நா. புகழேந்தி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம. ஜெயச்சந்திரன், திருவெண்ணெய்நல்லூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கு.ஓம் சிவசக்திவேல், பேரூராட்சித் தலைவா் அஞ்சுகம், ஒன்றியக் குழு துணைத்தலைவா் கோமதி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் விஸ்வநாதன், சித்தலிங்கமடம் ஊராட்சித் தலைவா் பெ.கெங்கையம்மாள், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் யுவராஜ், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் உமா மகேஸ்வரி மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதிபதி முன்பு விஷம் அருந்தி ஊழியா் தற்கொலை முயற்சி

பள்ளப்பட்டியில் 3 பேருக்கு மானியத்துடன் ஆட்டோ

தளவாபாளையம் அருகே விபத்து -இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நீதிபதி மீது நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம்

பிரதமரின் பிரசாரத்துக்கு தோ்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் -ஜவாஹிருல்லா பேட்டி

SCROLL FOR NEXT