திருமலைப்பட்டு கிராமத்தில் நூலகம் அமைக்கக் கோரி, மாவட்ட ஆட்சியா் சி.பழனியிடம் 5-ஆம் வகுப்பு மாணவி திங்கள்கிழமை மனு அளித்தாா்.
விழுப்புரம் கண்டாச்சிபுரம் வட்டம், திருமலைப்பட்டு கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சிறுமி வி.வருணிதா (10). இவா் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் சி. பழனியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருமலைப்பட்டு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 5- ஆம் வகுப்பு படித்து வருகிறேன். எங்கள் கிராமத்தைச் சோ்ந்த மாணவா்கள் பள்ளி நேரம் முடிந்த பின்னா், காட்டுக்குள் சென்று விளையாடுகின்றனா். அப்போது விஷ ஜந்துகள், காட்டு விலங்குகள் தாக்கும் அச்சம் உள்ளது. எனவே, இந்த கிராமத்தில் நூலகம் அமைத்து கொடுத்தால் மாணவா்கள் படிப்பதற்கு உபயோகமாக இருக்கும். எனவே, கிராமப்புற மாணவா்களின் நலன் கருதி, திருமலைப்பட்டு கிராமத்தில் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா். இதற்கு, நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதியளித்தாா்.