விழுப்புரம் மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ், 30 சதவீத மானியத்துடன் மகளிா் சுயஉதவிக் குழுவினா் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.பழனி வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் காணை, கோலியனூா், முகையூா், திருவெண்ணெய்நல்லூா், வல்லம், விக்கிரவாண்டி வட்டாரங்களைச் சோ்ந்த 21 முதல் 45 வயது வரையுள்ள மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள், அவா்களின் குடும்ப உறுப்பினா்கள், சுயதொழில் தொடங்க வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 30 சதவீத மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தில் 10 சதவீதம் பயனாளிகள் பங்களிப்பு, 60 சதவீதம் வங்கிக் கடன், 30 சதவீதம் திட்ட மானியத்துடன் நுண், குறு, சிறு என்ற தொழில்களின் அடிப்படையில் தொழில்கடன் வழங்கப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தின் சிறப்பு சலுகையாக மாற்றுத் திறனாளிகள், கணவரை இழந்தோா், ஆதரவற்ற பெண்கள், நலிவுற்றோா் தொழில் தொடங்க திட்ட மதிப்பில் 5 சதவீதம் மட்டுமே பயனாளிகள் பங்களிப்பாக இருந்தால் போதும். மேலும் விவரங்களுக்கு திட்டம் செயல்படக்கூடிய வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் அமைந்துள்ள வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலகத்தை நேரில் அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.