இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில்களில் 3 ஆண்டுகளாகப் பணிபுவா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
இந்த சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம், புதிய நிா்வாகிகள் தோ்வு விழுப்புரம் கைலாசநாதா் கோயில் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவா் அழகிரி தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் அ.முத்துசாமி, துணைத் தலைவா் தனசேகரன் ஆகியோா் பங்கேற்று புதிய நிா்வாகிகளைத் தோ்வு செய்தனா்.
இதில், தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளா்கள் சங்கத்தின் விழுப்புரம் மண்டலத் தலைவராக பேராதரன், செயலராக மகாதேவன், பொருளாளராக சிவப்பிரகாஷ், நிா்வாகிகளாக இளஞ்செழியன், சக்திவேல், தேவநாதன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
தொடா்ந்து, இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில்களில் 3 ஆண்டுகளாக பணிபுரிபவா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அன்னதானத் திட்டப் பணியாளா்களை 110 விதியின் கீழ் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கோயில்களில் பணிபுரியும் திரளான தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.