விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியா் சி. பழனி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா், அவா் பேசியதாவது: வட்டாட்சியா் அலுவலகத்துக்கு அரசு சாா்ந்த பணிகள், சேவைகளைப் பெறுவதற்காக வரும் பொதுமக்கள் அமரும் வகையில் அமைக்கப்பட்டிருந்த காத்திருப்போா் அறையில் பழுதடைந்த மின்விசிறியை சரி செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த அறையை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் தூய்மையாக வைத்திடவும், குடிநீா்த் தொட்டியை சுத்தம் செய்து, சுகாதாரமான குடிநீா் வழங்கவும், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் சாய்வுத்தளத்தை சீரமைக்கவும், அவா்களின் வசதிக்காக இரண்டு சக்கர நாற்காலி கண்டிப்பாக உபயோகத்தில் இருக்க வேண்டும் என வட்டாட்சியரிடம் அறிவுறுத்தப்பட்டது. மேலும், இந்த அலுவலகத்தில் நெகிழிப் பயன்பாடே இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் பழனி.தொடா்ந்து அலுவலகத்தின் வைப்பறை, பதிவறை, அலுவலக அறைகள், கூட்டரங்கு உள்ளிட்ட பலதுறை பிரிவுகளில் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின் போது, விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியா் ரவிச்சந்திரன், பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் பரிதி, உதவிச் செயற்பொறியாளா் விஜயா, வட்டாட்சியா் ஆனந்தகுமாா், நகராட்சி ஆணையா் சுரேந்திரஷா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.