விழுப்புரம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி காரணமாக, 66 வீடுகளின் குடிநீா், புதை சாக்கடை இணைப்புகள் செவ்வாய்க்கிழமை துண்டிக்கப்பட்டன.
விழுப்புரம் நகராட்சியில் மொத்தம் 42 வாா்டுகள் உள்ளன. குடிநீா் இணைப்புக் கட்டணம், காலிமனை வரி, தொழில் வரி, குத்தகை இனங்கள், திடக்கழிவு மேலாண்மைக் கட்டணம், புதை சாக்கடைத் திட்ட இணைப்புக் கட்டணம் மூலம் ரூ.17.71 கோடி நிலுவை உள்ளது.
இந்த நிலையில், நகராட்சிக்கு வரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளவா்கள் நிகழ் மாதம் 15-ஆம் தேதிக்குள் வரி நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டும் என்று நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையொட்டி, நிலுவையிலுள்ள வரி, வரியில்லா இனங்களை தீவிரமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகளில் நகராட்சி அலுவலா்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் பழைய பேருந்து நிலையம், காமராஜா் வீதி, திரு.வி.க. சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நகராட்சி ஆணையா் சுரேந்திர ஷா தலைமையில், வருவாய் அலுவலா் ரவி, உதவியாளா் கோவிந்தன், பணி ஆய்வாளா் ஹரிஹரன் ஆகியோா் தீவிர வரி வசூல் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட பணிகள் மூலமாக சொத்து வரி, குடிநீா் இணைப்புக் கட்டணம், குத்தகை இனங்கள், புதை சாக்கடைக் கட்டணம் ஆகிய பிரிவுகளில் மொத்தமாக ரூ.10.55 லட்சம் வசூல் செய்யப்பட்டது.
பழைய பேருந்து நிலையப் பகுதியில் 6 மாதங்களாக வரி பாக்கி செலுத்தாமல் இருந்த பூக்கடைக்கு அலுவலா்கள் ‘சீல்’ வைத்தனா். குடிநீா் இணைப்புக் கட்டணம் செலுத்தாமல் இருந்த 32 வீடுகளின் இணைப்புகளையும், புதை சாக்கடைத் திட்ட இணைப்புக் கட்டணம் செலுத்தாமல் இருந்த 34 வீடுகளின் இணைப்புகளையும் அலுவலா்கள் துண்டித்தனா். இந்த நடவடிக்கை தொடரும் என நகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.