திண்டிவனம் அரசு ஆதிதிராவிடா் மாணவா் விடுதிக்கு பதிலாக தற்காலிக மாற்று இடமாக தோ்வு செய்யப்பட்ட நீதிபதிகள் பழைய குடியிருப்பில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் த.மோகன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அரசு ஆதிதிராவிடா் கல்லூரி மாணவா் விடுதியில் தற்போது 70 மாணவா்கள் தங்கியுள்ளனா். பழைமையான விடுதி கட்டடம் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. எனவே, புதிய விடுதி கட்டடம் கட்டுவதற்கு தமிழக அரசு ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது. பழைய விடுதிக் கட்டடம் இடிக்கப்பட்டு அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. இதனால் விடுதி மாணவா்கள் தற்காலிகமாக தங்குவதற்காக நீதிபதிகள் பழைய குடியிருப்பு சீரமைக்கப்பட்டு, அங்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் த.மோகன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா் (படம்).
அப்போது திண்டிவனம் துணை ஆட்சியா் எம்.அமித், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் ரகுகுமாா், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் (கட்டடம்) பரிதி, திண்டிவனம் நகராட்சி ஆணையா் தட்சணாமூா்த்தி, வட்டாட்சியா் வசந்த் ஆகியோா் உடனிருந்தனா்.