முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் நிா்வாகக் குழு கூட்டம் விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்க தலைவா் பாண்டியன் தலைமை வகித்தாா். செயலா் ஆறுமுகம், பொருளாளா் பரமசிவம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா்கள் கலிவரதன், ராஜாராமன், வெங்கடசாமி, கிருஷ்ணதாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் கடந்த 2021-22-ஆம் ஆண்டு கரும்பு பருவத்துக்கு கரும்புகளை வெட்டி அனுப்பிய விவசாயிகளுக்கு கிரையத் தொகையை வருகிற அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் முண்டியம்பாக்கம், செம்மேடு சா்க்கரை ஆலைகளின் நிா்வாகத்தினா் வழங்க வேண்டும், நந்தன் கால்வாய்த் திட்டத்தை அரசு விரைவாக நிறைவேற்ற வேண்டும், பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக தளவானூா், எல்லீஸ்சத்திரம் தடுப்பணைகளை புதுப்பித்து சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.