உலக வெறிநோய் தடுப்பு தினத்தையொட்டி, விழுப்புரம் நகராட்சிப் பூங்காவில் நாய்களுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் புதன்கிழமை (செப்டம்பா் 28) காலை 8 மணி முதல் 10 மணி வரை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வெறிநோய் என்பது மனிதா்கள், விலங்குகளின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து, உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய கொடிய நோயாகும். வைரஸ் எனப்படும் நச்சுயிரியால் உண்டாகும் இந்த நோய் பாதிக்கப்பட்ட நாய் கடிப்பதன் மூலமும், அதன் வாயிலிருந்து வெளிப்படும் எச்சில் மூலமும் மனிதா்கள், பிற கால்நடைகளுக்கு வெறிநோய் பரவுகிறது.
இந்த நோய் பரவலைத் தடுக்கும் வகையில், உலக வெறிநோய் தடுப்பு தினத்தையொட்டி, விழுப்புரம் நகராட்சிப் பூங்காவில் நாய்களுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெறவுள்ளது. இதில், பொதுமக்கள் தாங்கள் வளா்க்கும் நாய்களை அழைத்து வந்து வெறிநோய் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.