கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முதியவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
உளுந்தூா்பேட்டை அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 6 வயது சிறுமி, கடந்த 26.12.2018 அன்று அதே பகுதியிலுள்ள பெட்டிக் கடைக்கு பொருள்கள் வாங்கச் சென்றபோது, அங்கிருந்த நடராஜன் (73) அந்தச் சிறுமையை தனது வீட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், உளுந்தூா்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, நடராஜனை கைது செய்தனா். இந்த வழக்கு விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதி சாந்தி, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நடராஜனுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டாா்.