விழுப்புரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கு ரூ.12 லட்சத்தில் மேஜைகள், இருக்கைகள் வழங்கப்பட்டன.
இந்தக் கல்லூரியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இதற்காக கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்ட நிலையில், மாணவ, மாணவிகள் அமருவதற்குத் தேவையான மேஜைகள், இருக்கை வசதிகள் இல்லாத நிலை இருந்து வந்தது.
இதையடுத்து, விழுப்புரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் இரா.லட்சுமணன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் 150 இணை (செட்) மேஜை, இருக்கைகளை கல்லூரிக்கு வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் சிவகுமாா், நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, நகா்மன்ற உறுப்பினா்கள் மணவாளன், புருஷோத்தமன், மாவட்டப் பொருளாளா் இரா.ஜனகராஜ், நகரச் செயலா் சக்கரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.