விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசி சமூக வலைதளத்தில் விடியோ வெளியிட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்டக் காவல் துறை தரப்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டதாவது:
விழுப்புரம் மாவட்டம், வளவனூா், குமரக்குப்பம், வடக்கு தொட்டியான் தோப்புப் பகுதியைச் சோ்ந்தவா் ப.பிரகாஷ் (40). சமூக ஆா்வலரான இவா், கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசி சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்டாா்.
இதுகுறித்து வளவனூா் போலீஸாா் சமூக ஆா்வலா் ப.பிரகாஷ் மீது பொது அமைத்திக்கு குந்தகம் விளைவித்தல், இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.
இந்த நிலையில், ப.பிரகாஷ் அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா் என்று காவல் துறை தெரிவித்தது.