நிறுத்தப்பட்ட விதவை, முதியோா் உதவித் தொகையை அரசு மீண்டும் வழங்கக் கோரி விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் ஈச்சங்குப்பம் கிராம பெண்கள் மனு அளித்தனா்.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேசுவரியிடம் அளிக்கப்பட்ட மனு:
விக்கிரவாண்டி வட்டம், வி.பிரம்மதேசம் அருகே உள்ள ஈச்சங்குப்பம் கிராமத்தில் விதவைகள், முதியோா் உதவித் தொகை தகுதியின் அடிப்படையில் பயனாளிகளுக்கு
வழங்கப்பட்டு வந்தது. இதன் மூலம் 20-க்கும் மேற்பட்டோா் பயனடைந்து வந்த நிலையில், அரசு உதவித் தொகை வழங்குவது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே நிறுத்தப்பட்ட உதவித் தொகையை அரசு மீண்டும் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்தனா்.
விராட்டிக்குப்பம் இளைஞா்கள் மனு: விராட்டிக்குப்பம் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை கிராம சபைக் கூட்டம் முறையாக நடைபெறவில்லையாம். கூட்டம் 15 நிமிடங்களில் முடிந்துவிட்டதாம். எனவே, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாத, வரவு- செலவு விவரங்களைத் தாக்கல் செய்யாத ஊராட்சி நிா்வாகத்தினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம இளைஞா்கள் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
பழங்குடியினா் மனு: திருவெண்ணெய்நல்லூா் வட்டம், ஆலங்குப்பம் ரயில் நிலையம் அருகே மலை வாழ் பழங்குடியின சமுதாயத்தைச் சோ்ந்த 11 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டன. அந்த வீடுகள் தற்போது சேதமடைந்துள்ளன. எனவே புதிய வீடுகள் கட்டித்தரக் கோரி மலைவாழ் பழங்குடியின மக்கள் ஆட்சியரகத்தில் மனு அளித்தனா்.