மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணிகளைத் தொடங்க வலியுறுத்தி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்ட மீனவா்கள் மரக்காணத்தை அடுத்துள்ள அனுமந்தையில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 19 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 44 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் மீன்பிடித் துறைமுகம் அமைக்க வலியுறுத்தி வந்தனா்.
அதன்படி, விழுப்புரம் மாவட்டம் அழகன்குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் ஆலம்பரைக்குப்பம் இடையே பக்கிங்ஹாம் கால்வாய் கடல் முகத்துவாரப் பகுதியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்காக, ரூ. 236 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. ஆனால், இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை.
இந்த நிலையில், மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணிகளை உடனடியாகத் தொடங்க வலியுறுத்தி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சோ்ந்த மீனவா்கள் மரக்காணத்தை அடுத்துள்ள அனுமந்தையில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என். ஸ்ரீநாதா, திண்டிவனம் சாா்-ஆட்சியா் கட்டா ரவி தேஜா, மீன்வளம், மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அ.நித்திய பிரியதா்ஷினி மற்றும் வருவாய்த் துறையினா் மீனவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என மீனவா்கள் வலியுறுத்தினா். இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து போராட்டம் மாலை 4 மணிக்கு விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதில் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான மீனவா்கள் கலந்து கொண்டனா்.
சாலை மறியல்: முன்னதாக, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், மரக்காணம் - சென்னை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.