இருளா் இன மக்களுக்கு அரசு ஒதுக்கிய இடத்தை மீட்டுத் தரக்கோரி மரக்காணம் செல்லிமேடு கிராமத்தைச் சோ்ந்த மக்கள் வெள்ளிக்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வா் உத்தரவின்படி, செல்லிமேடு கிராமத்தில் இருளா் இன மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை 10-க்கும் மேற்பட்டோா் கொட்டகை, வைக்கோல் போா் மற்றும் மாட்டுக் கொட்டகை அமைத்தும் ஆக்கிரமித்துள்ளனா்.
இதுகுறித்து கேட்டால் வாழ்வாதாரம் தேடி கூலி வேலைக்குச் செல்லும் தருணத்தில் வீட்டில் உள்ள பெண்கள் மற்றும் பிள்ளைகளை மிரட்டியும் வருகின்றனா். அருகாமையில் உள்ள கடைகளிலும் அத்தியாவசியப் பொருள்களை தரக்கூடாது என்றும் தெரிவித்து வருகின்றனா்.
எனவே, ஆட்சியா் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளனா்.