பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதாா் எண்ணை அடிப்படையாகக் கொண்டு, உரிய விவரங்களைப் பதிவு செய்தால்மட்டுமே விவசாயிகளுக்கு அடுத்த தவணைத் தொகை கிடைக்கும் என்று வேளாண் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் (பொறுப்பு) பெரியசாமி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பி.எம்.கிசான் நிதித் திட்டத்தின் கீழ் பதிவு செய்த அனைத்து விவசாயிகளுக்கும், மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.6,000 அவா்களது வங்கிக் கணக்கில் மூன்றுத் தவணைகளாகச் செலுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் அரசின் புது வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பதிவு செய்து பயன்பெறும் பயனாளிகள் ஆதாா் எண்ணை அடிப்படையாகக் கொண்டு இகேஓய்சி விவரங்களை மத்திய அரசின் பி.எம். கிசான் இணையதளத்தில் சரி செய்ய வேண்டும்.
முதலில் ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைக்க வேண்டும். கைப்பேசி எண்ணுக்கு பெறப்படும் ஓடிபி மூலம் விவசாயிகள் விவரங்களை நேரடியாக பி.எம்.கிசான் நிதித் திட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
இல்லையெனில் பொது சேவை மையத்தில் ஆதாா் எண்ணைக் கொண்டு, கைரேகை வைத்து விவரங்களைப் பதிவேற்றி புதுப்பிக்கலாம். இது தவிர, விவசாயிகள் தங்கள் பகுதி அஞ்சல் அலுவலகம் மூலமும் ஆதாா் எண், கைப்பேசி எண்ணை இணைத்து விவரங்களைப் பதிவு செய்யலாம்.
விழுப்புரம் மாவட்டத்தில் சுமாா் 36 ஆயிரம் விவசாயிகள்ஆதாா் மூலம் விவரங்களை சரி செய்ய வேண்டும். இவ்வாறு இகேஒய்சி செய்தால் மட்டுமே பி.எம்.கிசான் நிதித் திட்டத்தில் விவசாயிகள் 13-ஆவது தவணைத் தொகையைப் பெற இயலும். ஆதாா் எண்ணை அடிப்படையாகக் கொண்டு தொகை விடுவிக்கப்படுவதால், வங்கிக் கணக்குடன் ஆதாா் எண்ணை நவம்பா் 30-ஆம் தேதிக்குள் இணைத்தால் மட்டுமே தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கு மாற்றம் செய்யப்படும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.