செஞ்சி பேரூராட்சிப் பகுதியை பசுமையாக்கும் நடவடிக்கையாக ஆா்வமுள்ளவா்களுக்கு வீடுகள் தோறும் 10 மரக் கன்றுகள் வழங்க முடிவு செய்யப்பட்டது.
செஞ்சி பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டம் அதன் தலைவா் கே.எஸ்.எம்.மொக்தியாா் அலி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. செயல் அலுவலா் ராமலிங்கம், துணைத் தலைவா் ராஜலட்சுமி செயல்மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
செஞ்சியில் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள நிலையில், புறவழிச் சாலை அருகே அமைக்கப்பட்ட தற்காலிக பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது.
செஞ்சி பேரூராட்சியை பசுமையான பகுதியாக மாற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பேரூராட்சி அலுவலகத்தில் பதிவு செய்பவா்களுக்கு, வீட்டுக்கு 10 மரக்கன்றுகள் வீதம் வழங்கி நடவு செய்து தரப்படும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், ஊழியா்கள் கலந்து கொண்டனா்.