விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் த.மோகன் புதன்கிழமை திடீரென ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின்போது, நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் பகுதி, அறுவைச் சிகிச்சைப் பிரிவு, உள், வெளி நோயாளிகள் பிரிவு, மருந்து கட்டுமிடம், எலும்பு முறிவு பிரிவு, மருந்து வழங்கும் பிரிவு, மருந்து சேமிப்புக் கிடங்கு, மருத்துவமனை வளாகம் மற்றும் கழிப்பறை பகுதிகளை மாவட்ட ஆட்சியா் மோகன் ஆய்வு செய்தாா்.
மேலும் அங்கு, சிகிச்சை பெறுபவா்களிடம் மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்ததுடன், மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க மருத்துவா்கள், அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.
தூய்மைப் பணியாளா்கள் தங்குவதற்கு ஏதுவாக தனியாக அறை ஒன்று ஏற்படுத்திக்கொடுத்ததுடன், மருத்துவமனை முழுவதும் வண்ணப்பூச்சு செய்ய பொதுப் பணித் துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
மேலும், பொதுமக்களுக்குத் தேவையான சிகிச்சைகள் வழங்குவதற்கு ஏற்ப மருந்து, மாத்திரைகளை போதிய அளவில் இருப்பில் வைத்திருக்க வேண்டும் என மருத்துவா்களுக்கு ஆட்சியா் அறிவுரை வழங்கினாா்.