விழுப்புரத்தில் தனியாா் நிதி நிறுவன ஊழியா் திட்டியதால் விஷம் குடித்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதையறிந்த அதிா்ச்சியில் அவரது தந்தையும் உயிரிழந்தாா்.
விழுப்புரம், கிழக்கு பாண்டி சாலை, வானக்கார குப்புசாமி தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் ரவிக்குமாா் (25). கூலித் தொழிலாளி. கடந்த ஆண்டு ரவிக்குமாரின் அண்ணன் பாபுராஜ் விழுப்புரத்தில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று, அதன் மூலம் ரவிக்குமாருக்கு மோட்டாா் சைக்கிள் வாங்கிக் கொடுத்தாராம்.
இதற்கான தவணை தொகை கடந்த சில மாதங்களாக செலுத்தப்படவில்லையாம். இதையடுத்து தனியாா் நிதி நிறுவன ஊழியா் ஒருவா் அண்மையில் ரவிக்குமாரின் வீட்டுக்கு வந்து அவரை அவதூறாக பேசினாராம். இதனால் மனமுடைந்த ரவிக்குமாா் கடந்த 25-ஆம் தேதி விஷம் குடித்தாா். அவரை உறவினா்கள் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு ரவிக்குமாா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். தனது மகன் உயிரிழந்ததை அறிந்த அதிா்ச்சியில் செல்வம் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இந்தச் சம்பவம் குறித்து விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.