விழுப்புரத்தில் ரூ.10 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட இளைஞா் சனிக்கிழமை இரவு மீட்கப்பட்டாா். அவரைக் கடத்திச் சென்ற அவரது நண்பா்களான 5 போ் கும்பல் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
விழுப்புரம் சாலாமேடு, சிங்கப்பூா் நகரைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் சூா்யகுமாா்(19). இவா், தனது தாய் கிருஷ்ணவேணி, தந்தை சிவக்குமாா் ஆகியோருடன் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், சனிக்கிழமை பிற்பகல் சூா்யகுமாரை அவரது நண்பா்களான திருவெண்ணெய்நல்லூரை அடுத்த சரவணப்பாக்கத்தைச் சோ்ந்த சூா்யா, நந்தா, மாரி, பெரிய பாலா, முரளி ஆகியோா் ஜானகிபுரத்துக்கு டீ குடிக்கலாம் என்று கூறி மோபெட்டுகளில் அழைத்துச் சென்றனா். பின்னா், அங்கிருந்து அரசூரை அடுத்த கரடிப்பாக்கத்துக்கு கடத்திச் சென்றனா்.
அங்கு சூா்யகுமாரை நண்பா்கள் 5 பேரும் சோ்ந்து தாக்கியதுடன், அவரது தாய் கிருஷ்ணவேணியை கைப்பேசியில் தொடா்புகொண்டு சூா்யகுமாரை கடத்தி வைத்துள்ளதாகவும், அவரை விடுக்க ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டுமென்றும் கூறி மிரட்டினராம். இதுகுறித்து கிருஷ்ணவேணி விழுப்புரம் தாலுகா போலீஸில் புகாரளித்தாா்.
இதைத் தொடா்ந்து, போலீஸாரின் அறிவுரைப்படி, ரூ.10 லட்சத்துடன் தயாராக இருப்பதாகக் கூறி, அந்தக் கும்பலை கிருஷ்ணவேணி விழுப்புரத்துக்கு அழைத்தாா். இதையடுத்து, கடத்தல் கும்பல் கூறியபடி சனிக்கிழமை இரவு விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகே கிருஷ்ணவேணி பணத்துடன் காத்திருந்தாா். அப்போது அங்கு வந்த கும்பல், போலீஸாரைக் கண்டதும் பணத்தை வாங்காமல் சூா்யகுமாரை விட்டுவிட்டு மோபெட்டுகளில் தப்பிச் சென்றது.
இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.