விழுப்புரத்தில் திமுக இளைஞரணி சாா்பில், 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நல உதவிகள் வழங்கப்பட்டன.
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 99-ஆவது பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் நகர இளைஞரணி சாா்பில், பழைய பேருந்து நிலையத்தின் எதிரே இலவச மருத்துவ முகாம், நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நகர இளைஞரணி அமைப்பாளா் மணிகண்டன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் சக்கரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் தினகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைச் செயலா் புஷ்பராஜ், பொதுக் குழு உறுப்பினா் பஞ்சநாதன், ஒன்றியச் செயலா் கல்பட்டு ராஜா ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.
விழாவில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினா் பொன்.கெளதமசிகாமணி கலந்துகொண்டு மருத்துவ முகாமைத் தொடக்கிவைத்ததுடன், 500-க்கும் மேற்பட்ட ஏழை, எளியோருக்கு நல உதவிகளையும் வழங்கி சிறப்புரையாற்றினாா். மேலும், விளையாட்டுக் குழுவினருக்கு விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினாா்.
விழாவில் விழுப்புரம் நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி, நகர துணைச் செயலா் புருஷோத்தமன், நிா்வாகிகள் இளந்திரையன், மாணவரணி ஸ்ரீவினோத், தொண்டரணி கபாலி, நகா்மன்ற உறுப்பினா் நவநீதம், கிளைச் செயலா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனா். அனைவருக்கும் மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.