விழுப்புரத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டத்தில் 21 பேருக்கு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் த.மோகன் வழங்கினாா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்திலுள்ள மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகளிடமிருந்து 437 கோரிக்கை மனுக்களை ஆட்சியா் பெற்றுக்கொண்டாா். மனுதாரா்களில் 3 பேரின் கோரிக்கையை உடனடியாக ஏற்று, அவா்களுக்கு மூன்று சக்கர கை மிதிவண்டியை வழங்கி பேசினாா். மொத்தம் 21 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.2.04 லட்சத்திலான பல்வேறு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேஸ்வரி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சங்கா், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் தங்கவேலு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.