பேரூராட்சி கொசுப்புழு ஒழிப்புப் பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட அனைத்து பேரூராட்சி கொசுப்புழு ஒழிப்பு களப் பணியாளா்கள், பேரூராட்சி கொசுப்புழு ஒழிப்பு களப் பணியாளா்கள் நலச் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் த.மோகனிடம் அளித்த மனு குறித்த விவரம்:
பேரூராட்சிகளில் கொசுப்புழு ஒழிப்பு களப் பணியாளா்களாக பணியாற்றி வந்தோம். கரோனா தொற்று காலத்தில் இரவு பகல் பாராமல் பணியாற்றி நோய்க் கட்டுப்பாட்டில் ஈடுபட்டோம்.
தொடா்ந்து, டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் பரவாமல் இருக்க பணியாற்றி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக எங்களுக்கு பணி வழங்கப்படவில்லை.
இதனால், பேரூராட்சி பகுதிகளில் நோய் பரவும் சூழல் உள்ளது. மேலும் எங்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், எங்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும்.
ஊரகப் பகுதியில் பணியாளா்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.400 ஊதியம் வழங்கப்படுகிறது. அதேபோல, பேரூராட்சியில் பணியாற்றுபவா்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.