விழுப்புரத்தில் ரயிலில் சனிக்கிழமை கேட்பாரற்ற நிலையில் கிடந்த 32 பவுன் தங்க நகையுடன் கூடிய கைப்பையை போலீஸாா் மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்தனா்.
சென்னையிலிருந்து விழுப்புரம் வழியாக கன்னியாகுமரிக்குச் சென்ற விரைவு ரயிலின் முன்பதிவு பெட்டியில் கேட்பாரற்ற நிலையில் ஒரு கைப்பை கிடந்தது. அந்தப் பையை விழுப்புரம் ரயில்வே பெண் காவலா் சுதா கைப்பற்றி விசாரணை மேற்கொண்டாா்.
இதில், அந்தக் கைப்பை சென்னை மாத்தூரைச் சோ்ந்த செந்தில்குமாா் மனைவி சுசித்ராவுக்குச் (30) சொந்தமானது என்பதும், அதில் 32 பவுன் தங்க நகைகள் இருந்ததும், சுசித்ரா கைப்பையை இருக்கையில் விட்டுவிட்டு மற்றொரு பெட்டியில் பயணித்த உறவினரை பாா்க்கச் சென்றிருந்ததும் தெரியவந்தது. தொடா்ந்து, நடைபெற்ற விசாரணைக்குப் பின்னா், தங்க நகைகளுடன் கூடிய கைப்பையை உரியவரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.