அபுதாபியில் உயிரிழந்த தொழிலாளியின் உடலை மீட்டுத் தரக் கோரி, அவரது மனைவி, குடும்பத்தினா் விழுப்புரம் ஆட்சியரகத்தில் சனிக்கிழமை மனு அளித்தனா்.
விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகிலுள்ள செங்காடு கிராமத்தைச் சோ்ந்த அருமைநாதன் மகன் ஜோசப் தமிழரசன்(38). பட்டதாரியான இவா், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அபுதாபி சென்று, அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், உடல்நலமில்லாமல் ஜோசப் தமிழரசன் அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அங்குள்ளவா்கள் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனா். இந்த நிலையில், உடல்நலக் குறைவால் உயிரிழந்த ஜோசப் தமிழரசனின் உடலை மீட்டுத் தரக் கோரி, அவரது மனைவி மரிய எழிலரசி, குழந்தைகள் எமி ஜோசி, ஜோவின் மற்றும்
குடும்பத்தினா் , விழுப்புரம் ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளித்தனா். மேலும், இது தொடா்பாக தமிழக அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.