திண்டிவனம் அருகே ஓங்கூா் பாலத்தில் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில் வாகனப் போக்குவரத்துக்கு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஓங்கூா் பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் ஒருபுறம் பழைய பாலம் உள்ளது. இந்தப் பாலத்தில் பழுது ஏற்பட்ட நிலையில், கடந்த ஜூலை 28-ஆம் தேதி முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வாகனங்கள் மாற்று வழியில் அனுமதிக்கப்பட்டன. இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள், பயணிகள் அவதியடைந்தனா்.
இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் பாலத்தை ஆய்வு செய்து சீரமைப்புப் பணிகளை தொடங்கினா். இந்தப் பணிகளை மாநில பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு இரண்டு முறை நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைவுபடுத்தினாா்.
இந்த நிலையில், பாலம் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், அதன் வழியாக வாகனங்கள் செல்ல வெள்ளிக்கிழமை முதல் அனுமதி அளிக்கப்பட்டது.