கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூா் வன்முறை வழக்கில் கைதானவா்களில் 64 பேருக்கு ஜாமீன் வழங்கி விழுப்புரம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
கனியாமூரில் உள்ள தனியாா் பள்ளி விடுதியில் பிளஸ்2 மாணவி ஸ்ரீமதி மா்மமான முறையில் உயிரிழந்தாா். இந்தச் சம்பவத்தை அடுத்து ஏற்பட்ட வன்முறை தொடா்பாக இதுவரை 322 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், கனியாமூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 296 போ் ஜாமீன் வழங்கக் கோரி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் தனித் தனியாக மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனுக்களின் மீதான விசாரணை நீதிபதி பூா்ணிமா முன்னிலையில் திங்கள்கிழமை தொடங்கியது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, 122 பேருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்தாா்.
ஜாமீன் மனுக்களின் மீதான விசாரணை செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தது. அப்போது, பரிசீலனையில் உள்ள 122 பேரில் 64 பேருக்கு மட்டும் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டாா். மற்றவா்களின் மனுக்கள் அடுத்தடுத்த நாள்களில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.