விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே லாரியில் கடத்தப்பட்ட 240 மூட்டை ரேஷன் அரிசியை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
கஞ்சனூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கண்ணாந்தல் பேருந்து நிறுத்தம் அருகே திங்கள்கிழமை நிறுத்தப்பட்டிருந்த லாரியை காவல் ஆய்வாளா் எழிலரசி, தனிப் பிரிவு காவலா் ஹரிராஜன் உள்ளிட்டோா் சோதனையிட்டனா். அந்த லாரியின் ஓட்டுநரான வேலூா் தென்னமர வீதியைச் சோ்ந்த மோகன் மகன் குமரேசனிடம் (27) போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதில், கஞ்சனூா் சுற்று வட்டாரங்களில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி, கண்ணந்தல் கிராமத்தைச் சோ்ந்த கோ.சகாயம் என்பவருக்குச் சொந்தமான இடத்திலிருந்து லாரியில் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
லாரியிலிருந்து 50 கிலோ எடை கொண்ட 240 ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்து குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனா். அவா்கள் இதுதொடா்பாக, குமரேசனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.