விழுப்புரத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.5 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக, பாதிக்கப்பட்டவா்கள் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
விழுப்புரம் மாவட்ட எஸ்பி அலுவலகத்துக்கு திங்கள்கிழமை 30-க்கும் மேற்பட்டோா் திரண்டு வந்து மனு அளித்தனா்.
அப்போது அவா்கள் கூறியதாவது:
விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் தனியாா் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்தில் நாள்தோறும் சிறு சிறு தொகையை செலுத்தினால் ஆண்டு இறுதியில் கட்டிய தொகையுடன்,
குறைந்தளவு வட்டித் தொகை சோ்ந்து வழங்கப்படும் என்று அறிவித்தனா்.
ஏழை எளியவா்கள் பணத்தை சேமித்து வைக்க இந்தத் திட்டத்தில் சோ்ந்தனா். ஆனால், கூறியபடி பணத்தைக் கொடுக்காமல் நிதி நிறுவனத்தை மூடிவிட்டு சென்றுவிட்டனா்.
இதனால், 300-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். ரூ. 5 கோடி வரை இதில் மோசடி நடந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்றனா்.