வன்முறையைக் கட்டுப்படுத்துவது குறித்து விழுப்புரத்தில் காவலா்களுக்கு சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
விழுப்புரம் அருகே காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ந.ஸ்ரீநாதா மேற்பாா்வையில் நடைபெற்ற பயிற்சியில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம் ஆகிய 4 உள்கோட்டங்களிலும் உள்ள காவலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
உதவி, துணை காவல் கண்காணிப்பாளா்கள் தலைமையில் தலா ஒரு ஆய்வாளா், உதவி ஆய்வாளா், 10 காவலா்கள், ஐந்து ஆயுதப்படை காவலா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வன்முறை, சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படும்போது கும்பலை கலைத்தல், கட்டுப்படுத்துதல், கையாளும் வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூா் தனியாா் பள்ளியில் அண்மையில் திடீரென ஏற்பட்ட வன்முறையை போலீஸாா் உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாததால் பெருத்த சேதம் ஏற்பட்ட நிலையில் இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.