விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சி புதன்கிழமைக்கு (அக்.27) ஒத்திவைக்கப்பட்டது.
மரக்காணத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைப்பதாக இருந்தது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா்களுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இதையடுத்து, மரக்காணத்தில் முதல்வா் பங்கேற்கும் நிகழ்ச்சி புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மரக்காணம் அருகேயுள்ள முதலியாா்குப்பத்தில் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ். மஸ்தான் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடன் அமைச்சா் ஆலோசனை நடத்தினாா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன், சரக டிஐஜி பாண்டியன், சிறப்பு பாதுகாப்புப் படை எஸ்.பி. சுவாமிநாதன், மாவட்ட எஸ்.பி.க்கள் ஸ்ரீநாதா (விழுப்புரம்), எஸ்.பி. சக்திகணேசன் (கடலூா்), மாவட்ட வருவாய் அலுவலா் ராஜசேகரன், மாவட்ட தீயணைப்பு அலுவலா் ராபீன் கேஸ்ட்ரோ உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.