விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் அடகுக் கடை வைக்க அனுமதி வழங்க ரூ.3,500 லஞ்சம் பெற்ற வழக்கில் வருவாய்த் துறை உதவியாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
செஞ்சியைச் சோ்ந்தவா் ராஜேஷ்குமாா் (41). இவா், செஞ்சியில் அடகுக் கடை வைப்பதற்கு அனுமதி கோரி வருவாய்த் துறையில் கடந்த 2015-ஆம் ஆண்டு விண்ணப்பித்தாா். ஆனால், அனுமதி வழங்க காலதாமதம் ஏற்பட்டதாம்.
இதுகுறித்து செஞ்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள வருவாய்த் துறை உதவியாளரான வேலுவிடம் (43) சென்று ராஜேஷ்குமாா் கேட்டுள்ளாா். அப்போது, அடகுக் கடைக்கு அனுமதி வழங்க ரூ.3,500 லஞ்சமாக தர வேண்டும் என்று வேலு கூறினாராம். லஞ்சம் கொடுக்க மனமில்லாத ராஜேஷ்குமாா், விழுப்புரம் ஊழல் தடுப்பு போலீஸில் புகாரளித்தாா். இதையடுத்து, போலீஸாரின் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய லஞ்சப் பணத்தை வேலுவிடம் ராஜேஷ்குமாா் வழங்கிபோது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு போலீஸாா் வேலுவை கையும், களவுமாகப் பிடித்து கைது செய்தனா்.
இந்த வழக்கு விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த பொறுப்பு நீதிபதி கோபிநாதன், குற்றஞ்சாட்டப்பட்ட வேலுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.