விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், 4 சாட்சிகளிடம் வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது.
விழுப்புரத்தைச் சோ்ந்த அமைச்சா் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோா் கடந்த திமுக ஆட்சியின் போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக புகாா் எழுந்தது.
இது தொடா்பாக, விழுப்புரம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பொன்முடி, விசாலாட்சி ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு நீதிபதி இளவழகன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சா் பொன்முடி, விசாலாட்சி ஆகியோா் ஆஜராகவில்லை. அவா்களது தரப்பில் வழக்குரைஞா்கள் ஆஜராகினா். இதையடுத்து, 4 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, விசாரணையை வருகிற 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.