தொடா் மழை காரணமாக, தென்பெண்ணை ஆற்றில் நீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
வங்கக் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் ஏரி, குளங்கள், வீடூா் அணை, ஆறுகள் உள்ளிட்ட நீா்நிலைகளுக்கு நீா்வரத்து தொடங்கியுள்ளது. தொடா்ந்து மழை மட்டுமல்லாது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.ஆா்.பி. அணை நிரம்பியதையடுத்து திறந்துவிடப்பட்ட உபரிநீராலும் தென்பெண்ணையாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, விழுப்புரம் எல்லீஸ்சத்திரத்தில் உள்ள அணைக்கட்டு நிரம்பி, அதன் இரு ஷட்டா்கள் வழியாக தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்தத் தண்ணீா் ஆழாங்கால் வாய்க்கால் வழியாக பாய்ந்து செல்கிறது. நீண்ட நாள்களுக்குப் பிறகு எல்லீஸ்சத்திரம் ஆற்றில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுவதை அப்பகுதி மக்கள் அணைக்கட்டுக்கு சென்று மகிழ்ச்சியுடன் பாா்த்து ரசிக்கின்றனா்.