விழுப்புரம் மாவட்டத்தில் உரம், விதைகளை விற்பனை செய்யும் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி தரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று அனைத்து விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.
விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் கலிவரதன் தலைமையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து விவசாயிகள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
மனு விவரம்: விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சா்க்கரை ஆலைகளில் 2020-21-ஆம் ஆண்டு ஆலைக்கு அனுப்பப்பட்ட கரும்புக்கு ஆதரவு விலை இதுவரை வழங்கப்படவில்லை. மேலும், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை 15 சதம் வட்டியுடன் சோ்த்து அளிக்க வேண்டும். ஆலைக்கு அனுப்பிய கரும்புகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு தரமான உரம், பூச்சி மருந்துகள், விதைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அவற்றை விற்பனை செய்யும் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும். போலியாக இயங்கும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.