விழுப்புரத்தில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் திறக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இருந்து பிரித்து புதிதாக விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு பல்கலைகழகம் உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் புதிய பல்கலைக்கழகத்தில் இடம் தேர்வு செய்யும் பணி விரைவாக நடைபெற்று வந்தது. ஆனால் இதுவரையில் இதற்கான இடம் தேர்வு செய்யப்படவில்லை.
இந்த பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் என பெயர் சூட்டப்பட்டது. இதனிடையே இந்த பல்கலைக்கத்தை தற்காலிக கட்டடத்தில் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி விழுப்புரம் நகரில் இருந்த பழைய வட்டாட்சியர் அலுவலக கட்டடம் தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக விழுப்புரத்தில் டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைகழகத்தை திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ.ஆண்ணாதுரை நேரில் வந்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இனிப்புகளையும் வழங்கினார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர்(பொ) சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழுப்புரத்தில் பல்கலைக்கழகம் திறக்கப்பட்டதற்கு மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.