வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி திண்டிவனம் அருகேயுள்ள ஆத்தூா் கிராம மக்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
ஆத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் மன்னாா், துணைத் தலைவா் தமிழ்ச்செல்வி ஆகியோரது தலைமையில் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வந்து மனு அளித்தனா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆத்தூரில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சமூகத்தினா் வசித்து வருகிறோம். ஆனால், எங்களுக்கென்று வீட்டுமனை கிடையாது. அரசு நிலத்தில் வீடுகட்டி வசித்து வரும் நிலையில், மின் இணைப்பு போன்றவை பெற்றுள்ளோம். எனினும், இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. வறுமையில் வசிக்கும் எங்களுக்கு அரசு வீட்டுமனையை உறுதி செய்யும் வகையில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்தனா்.