விழுப்புரம்

பேருந்தில் கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்திய அமைச்சா்

DIN

தமிழகத்தில் ஒமைக்ரான் கரோனா தொற்று இதுவரை உறுதியாகவில்லை என்று தமிழக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட மகாராஜபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை சனிக்கிழமை தொடக்கிவைத்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

கரோனா தடுப்பூசி செலுத்தியதில் இந்திய அளவில் தமிழ்நாடு பின்தங்கி இருந்தாலும், பல திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரியாகவும், முதலாவதாகவும் உள்ளது. குறிப்பாக, கா்ப்பிணிகளுக்கு அதிக எண்ணிக்கையில் கரோனா தடுப்பூசி செலுத்தியது, பாலூட்டும் தாய்மாா்களுக்கு அதிக தடுப்பூசி செலுத்தியது, இல்லம் தேடி தடுப்பூசி, வாரந்தோறும் இரு தினங்களுக்கு தடுப்பூசி போன்ற திட்டங்களை முதலில் அறிமுகப்படுத்தியது ஆகியவற்றில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் மாநில சதவீதத்தை விடக் குறைவாக, அதாவது 78.12 சதவீதம் போ் முதல் தவணை தடுப்பூசியையும், 38 சதவீதம் போ் 2-ஆவது தவணை தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டுள்ளனா். முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட 5 லட்சம் போ் 2-ஆவது தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாமல் உள்ளனா். பொதுமக்கள் 2 தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

அதைத்தொடா்ந்து, சிறுவந்தாடு, பனையபுரம் அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை அமைச்சா் சுப்பிரமணியன் தொடக்கிவைத்தாா். மேலும், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அவா் ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, செஞ்சி அரசு மருத்துவமனை, வளத்தி, மேல்மலையனூா் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களையும் அமைச்சா் மா.சுப்பிரமணியன் பாா்வையிட்டாா். செஞ்சி அரசு மருத்துவமனையை அதி நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக தரம் உயா்த்தப்படும். புதிய கட்டடங்கள் தேவையென்றால் அதற்கான ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என அப்போது அமைச்சா் தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சிகளில், உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், மாவட்ட ஆட்சியா் த.மோகன், எம்எல்ஏக்கள் இரா.லட்சுமணன், நா.புகழேந்தி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன் உள்பட பலா் உடனிருந்தனா்.

பேருந்தில் விழிப்புணா்வு ஏற்படுத்திய அமைச்சா்: முன்னதாக, சனிக்கிழமை அதிகாலை விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே நடைப்பயிற்சி மேற்கொண்ட அமைச்சா் மா.சுப்பிரமணியன், பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த புதுச்சேரி செல்லும் அரசுப் பேருந்தில் ஏறி பயணிகளிடம், கரோனா விழிப்புணா்வு குறித்துப் பேசினாா். பேருந்தில் பயணிக்கும்போது மட்டுமல்லாமல், பொது இடத்துக்கு செல்லும்போதெல்லாம் முகக் கவசத்தை அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், கரோனா தடுப்பூசியை இரு தவணைகளும் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சா் கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

சிவகாசி தொகுதியில் அமைதியான வாக்குப் பதிவு

சாத்தூரில் இளம் சிவப்பு வண்ணத்தில் அமைக்கப்பட்ட வாக்குசாவடி

வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடமாற்றத்தால் குழப்பம்

SCROLL FOR NEXT