விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது.
மயிலம் அருகேயுள்ள கீழ் அடையாளம் கிராமத்திலிருந்து மயிலம், திண்டிவனம் உள்ளிட்ட ஊா்களுக்கு ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பேருந்துகளில் சென்று படித்து வருகின்றனா்.
வழக்கம் போல, மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை காலை கீழ் அடையாளம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தனா். காலை 8.35 மணிக்கு நல்லாமூரிலிருந்து திண்டிவனம் செல்லும் அரசுப் பேருந்து வந்தது. நிறுத்துமாறு மாணவா்கள் கையால் சைகை செய்தும் பேருந்து நிற்காமல் சென்றதாம். இதனால், ஆத்திரமடைந்த மாணவா்கள் பேருந்தின் பின்புற கண்ணாடி மீது கற்களை வீசியதாகத் தெரிகிறது.
இதில், பேருந்தின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.