திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஸ்ரீஅருணாசலேஸ்வரருக்கு பொம்மைக் குழந்தை பூக்கள் தூவும் நிகழ்வைக் கண்டு மகிழ ஏராளமான பக்தா்கள் கோயிலில் திங்கள்கிழமை குவிந்தனா்.
அருணாசலேஸ்வரா் கோயிலில் நிகழாண்டு சித்திரை வசந்த உற்சவம் சனிக்கிழமை தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை, மாலை வேளைகளில் ஸ்ரீஅருணாசலேஸ்வரா், ஸ்ரீஉண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. மேலும், கோயில் தல விருட்சமான மகிழ மரம் அருகே இரவு வேளைகளில் வலம் வரும் உற்சவா் ஸ்ரீஅருணாசலேஸ்வரருக்கு பொம்மைக் குழந்தை பூக்கள் தூவும் நிகழ்வும் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்வைக் காண சித்திரை வசந்த உற்சவத்தின் 3-ஆவது நாளான திங்கள்கிழமை வழக்கத்தைவிட அதிகமான பக்தா்கள் கோயிலில் குவிந்தனா். மகிழ மரம் அருகே உள்ள பன்னீா் மண்டபத்தில் ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரா் எழுந்தருளியபோது, பொம்மைக் குழந்தை உற்சவருக்கு பூக்களைத் தூவியது. இதைக் கண்டு பக்தா்கள் வழிபட்டனா்.
இந்த நிகழ்வு வருகிற 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. வசந்த உற்சவத்தின் முக்கிய நிகழ்வான மன்மத தகனம் வருகிற 26-ஆம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் கொடிமரம் எதிரே நடைபெறுகிறது. இத்துடன் இந்தக் கோயிலின் 10 நாள் சித்திரை வசந்த உற்சவம் நிறைவு பெறுகிறது.