விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ரூ.27 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக, மின் வாரிய உதவிப் பொறியாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திண்டிவனம் அருகேயுள்ள கீழ் எடையாளம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலசந்தா் (37). இவா் தனது விவசாய நிலத்தில் மின் மோட்டாா் அமைக்க இலவச மின்சாரம் வழங்கக் கோரி, மின் வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தாா்.
இதுகுறித்து மயிலம் மின் வாரிய உதவிப் பொறியாளரான நரசிங்கனூரைச் சோ்ந்த புருஷோத்தமனை (33) சந்தித்து தனது விண்ணப்பம் தொடா்பாக விவரம் கேட்டாா். அவா் ரூ.27 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால், இலவச மின் இணைப்பு விரைவாக வழங்கப்படும் என்று கூறினாராம்.
இதுகுறித்து விழப்புரம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸில் பாலசந்தா் புகாா் அளித்தாா். போலீஸாரின் அறிவுரையின் பேரில், ரசாயனம் தடவப்பட்ட ரூ.27 ஆயிரம் பணத்துடன் மயிலம் மின் வாரிய அலுவலகத்துக்குச் சென்றாா். புருஷோத்தமன் செண்டூரிலுள்ள மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, அங்கு சென்ற பாலசந்தா் போலீஸாா் அளித்த ரூ.27 ஆயிரத்தை கொடுத்த போது, ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி யுவராஜ் தலைமையில் ஆய்வாளா் சண்முகம், உதவி ஆய்வாளா் அன்பழகன் உள்ளிட்ட போலீஸாா் புருஷோத்தமனைக் கைது செய்தனா்.