விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த செடி, கொடிகளை நெடுஞ்சாலை துறையினா் அகற்றினா்.
செஞ்சி அருகே அகலூா் கிராமத்தில் இருந்து வெடால் பகுதிக்கு தொண்டூா், பூதேரி வரை கடந்தாண்டு தேசிய நெடுஞ்சாலையாக (இரு வழிச் சாலையாக) மாற்றி அமைத்தனா். இந்தச் சாலையில் அகலூா் ஏரிக்கரையின் மீது இரு புறங்களிலும் செடி, கொடிகள், மரங்கள் வளா்ந்து சாலையை ஆக்கிரமித்திருந்தன. இதனால், ஏரிக்கரைப் பகுதியில் எதிரிலும், வளைவுகளிலும் வரக்கூடிய வாகனங்கள் தெரியாததால், இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வந்தன.
எனவே, ஏரிக்கரைப் பகுதியில் செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடந்த 21-ஆம் தேதி தினமணியில் செய்தி வெளியானது.
இந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறை இளநிலை பொறியாளா் ஏழுமலை மற்றும் வருவாய் ஆய்வாளா் சின்னப்பையன் உள்ளிட்ட அலுவலா்கள் இந்தப் பகுதியை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு, அகலூா் ஏரிக்கரையில் சாலையின் இரு புறங்களிலும் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த செடி, கொடிகளை சாலைப் பணியாளா்கள் மூலம் முழுவதுமாக அகற்றி தூய்மைப்படுத்தினா். இதையடுத்து, ஏரிக்கரைப் பகுதியில் சாலை தூய்மையாகக் காட்சியளித்தது.
தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் செய்ய வேண்டிய இந்தப் பணியை தமிழக நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றினா்.